பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்து: நடிகர் எஸ்.வி.சேகர் 20-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு


பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்து: நடிகர் எஸ்.வி.சேகர் 20-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
x
தினத்தந்தி 6 July 2018 4:30 AM IST (Updated: 6 July 2018 12:09 AM IST)
t-max-icont-min-icon

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாக கருத்து தெரிவித்த வழக்கில், நடிகர் எஸ்.வி.சேகர் கரூர் கோர்ட்டில் வருகிற 20-ந் தேதி ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

கரூர்,

சென்னையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேட்டியளித்தபோது, பெண் பத்திரிகையாளர் ஒருவரது கன்னத்தை தட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கவர்னருக்கு பெண் பத்திரிகையாளரும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து தன் செயலுக்காக கவர்னர் வருத்தம் தெரிவித்தார்.

இதனை சுட்டிக்காட்டிய பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் சமூக வலைத்தளத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. இது சம்பந்தமாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. இதையடுத்து எஸ்.வி.சேகரை போலீசார் கைது செய்யக்கூடும் என தகவல் வெளியானது. ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.

இதற்கிடையே பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்திய குடியரசு கட்சியின் மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். ஆனால் நேற்று எஸ்.வி.சேகர் கோர்ட்டுக்கு வரவில்லை.

அவருக்கு பதில் அவரது வக்கீல் செந்தில்குமார் வந்தார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா, வருகிற 20-ந் தேதி எஸ்.வி.சேகர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். இல்லை என்றால் பிடிவாரண்டு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Next Story