குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி நகைக்கடைக்காரரிடம் ரூ.27 லட்சம் மோசடி பெண் உள்பட 2 பேர் கைது


குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி நகைக்கடைக்காரரிடம் ரூ.27 லட்சம் மோசடி பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 July 2018 11:15 PM GMT (Updated: 9 July 2018 12:01 AM GMT)

குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி நகைக்கடைக்காரரிடம் ரூ.27 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி நகைக்கடைக்காரரிடம் ரூ.27 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

குறைந்த விலைக்கு தங்கம்

மும்பை காந்திவிலி பகுதியை சேர்ந்த ஒரு நகைக்கடை அதிபரை சம்பவத்தன்று பபிதா (வயது25) என்ற பெண்ணும், அல்தாப் (33) என்பவரும் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள், தங்களுக்கு சுங்க வரித்துறையில் அதிகாரிகளை தெரியும் என்று தெரிவித்தனர்.

சுங்கவரித்துறை அதிகாரிகளிடம் சோதனையின் போது, சிக்கும் தங்க நகைகளை அவர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினர். இதை நம்பிய நகைக்கடைக்காரரிடம் அவர்கள் மும்பை விமான நிலையம் அருகே வந்தால் குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக கூறினர்.

2 பேர் கைது

அதன்பேரில் நகைக்கடைக்காரர் கடந்த மாதம் 15-ந் தேதி மும்பை விமான நிலையம் அருகே உள்ள ஓட்டலில் பபிதா, அல்தாப் இருவரையும் சந்தித்தார்.

அப்போது, அவர் தங்க நகைகளுக்காக அவர்களிடம் ரூ.27 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் நகைக்கடை க்காரருக்கு தங்கம் எதையும் கொடுக்கவில்லை. மேலும் பணத்துடன் தலைமறைவாகி விட்டனர். எனவே நகைக்கடைக்காரர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பபிதா, அல்தாப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story