விருதுநகர் அருகே பஸ் கவிழ்ந்தது: கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் பலி 50 பயணிகள் காயம்


விருதுநகர் அருகே பஸ் கவிழ்ந்தது: கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் பலி 50 பயணிகள் காயம்
x
தினத்தந்தி 12 July 2018 11:45 PM GMT (Updated: 12 July 2018 8:13 PM GMT)

விருதுநகர் அருகே தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் 2 மாணவர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.

விருதுநகர்,

விருதுநகரில் இருந்து நேற்று காலை 8.30 மணி அளவில் சிவகாசி வழியாக ராஜபாளையம் செல்லும் தனியார் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சை பண்டிதன்பட்டியை சேர்ந்த விஜயகுமார்(வயது 26) என்பவர் ஓட்டிச் சென்றார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நாச்சியார்பட்டியை சேர்ந்த வீராசாமி(33) என்பவர் கண்டக்டராக பணியாற்றினார்.

இந்த பஸ் விருதுநகர்-சிவகாசி ரோட்டில் அழகாபுரி விலக்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது, சாலையை கடந்து சென்ற ஒருவர் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பஸ்சை ரோட்டின் வலது புறம் திருப்பியபோது பஸ் நிலை தடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

காலை நேரம் என்பதால் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ-மாணவிகள் உள்பட 70-க்கும் மேற்பட்டவர்கள் பஸ்சில் இருந்தனர். பஸ் கவிழ்ந்ததும் பஸ்சில் இருந்தவர்கள் அலறி அடித்து பஸ்சைவிட்டு வெளியேற முயன்றனர். அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பலர் ஓடி வந்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டதுடன், இதுகுறித்து போலீசாருக்கும், விருதுநகர் தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.


அதன்பேரில் விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்பு படையினரும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சூலக்கரையை சேர்ந்த கொத்தியம்மாள்(60) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

காயம் அடைந்தவர்களை போலீசாரும், தீயணைப்பு படையினரும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து, அருப்புக்கோட்டையை சேர்ந்த சசிக்குமார்(21), ஆத்திப்பட்டியை சேர்ந்த கோபிக்கண்ணன்(19), விருதுநகரை சேர்ந்த ரவிக்குமார்(46), திருச்சுழியை சேர்ந்த தங்கமுனீஸ்வரன்(20), விருதுநகர் முத்தால்நகர் தேவராஜ்(21) ஆகிய 5 பேரும் மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சசிக்குமாரும், கோபிக்கண்ணனும் பரிதாபமாக இறந்தனர்.

இதில் சசிக்குமார் விருதுநகர்-சிவகாசி ரோட்டில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கோபிக்கண்ணன் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.

படுகாயம் அடைந்து மதுரையில் சிகிச்சை பெற்று வரும் தேவராஜ், தங்கமுனீஸ்வரன் ஆகிய 2 பேரும் பாலிடெக்னிக் மாணவர்கள் ஆவர்.


இதுதவிர பஸ் கண்டக்டர் வீராசாமி உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் விபத்தில் காயம் அடைந்தனர். இவர்களில் 20 பேர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியிலும், மற்றவர்கள் விருதுநகர் மற்றும் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பஸ்சில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்களாக இருந்ததால் அவர்களுடைய புத்தகப் பைகள் பஸ் கவிழ்ந்த இடத்தில் சிதறிக் கிடந்தன. இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு, பஸ் டிரைவர் விஜயகுமாரை கைதுசெய்தனர்.

Next Story