வங்கிக்கடன் பெற்றுத் தருவதாக பணம் பறிப்பு: ரூ.1 கோடி மோசடியில் ஒருவர் கைது


வங்கிக்கடன் பெற்றுத் தருவதாக பணம் பறிப்பு: ரூ.1 கோடி மோசடியில் ஒருவர் கைது
x
தினத்தந்தி 23 Aug 2018 5:13 AM IST (Updated: 23 Aug 2018 5:13 AM IST)
t-max-icont-min-icon

வங்கிக்கடன் பெற்றுத்தருவதாக கூறி தனியார் பால் நிறுவன உரிமையாளரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த சம்பவத்தில், ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடையாறு,

ஈரோட்டை சேர்ந்த மோகனசுந்தரம் (வயது 55) என்பவர், பால் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரை அணுகிய சிலர், தனியார் வங்கி ஒன்றில் இருந்து ரூ.50 கோடி கடன் பெற்றுத்தருவதாகவும், அதற்கு ரூ.1 கோடி கமிஷனாக தர வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதை நம்பிய அவர் ரூ.1 கோடி பணத்தை எடுத்துக்கொண்டு கடந்த 16-ந்தேதி சென்னை, பட்டினப்பாக்கம் கற்பகம் அவென்யூவில் உள்ள ஒரு விடுதிக்கு வந்தார். அங்கு அவரை ஏமாற்றி ரூ.1 கோடியை அந்த நபர்கள் எடுத்துச் சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பட்டினப்பாக்கம் போலீசார், ரூ.1 கோடி மோசடியில் ஈடுபட்ட அந்த கும்பலை தேடி வந்தனர். இதற்காக 4 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் பெங்களூரு, திருத்தணி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பவம் நடைபெற்ற விடுதி மற்றும் அதன் அருகில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் சம்பவத்தன்று பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த மோசடி கும்பல் பணத்துடன் ஒரு காரில் தப்பிச்சென்றது தெரிய வந்தது. அந்த கார் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் அந்த காரை ஓட்டிச் சென்ற நபர் சென்னை கொரட்டூரை சேர்ந்த ஜெயகுமார் (36) என்பது தெரியவந்தது. அவரை பிடிக்க கடந்த 2 நாட்களாக நீண்ட தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், நேற்று கொரட்டூரில் வைத்து அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது, அந்த மோசடி கும்பலுக்கு தேவையான ‘சிம்’ கார்டுகளை அவர்தான் வாங்கிக்கொடுத்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஜெயகுமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், அந்த மோசடி கும்பலை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

Next Story