திருவள்ளூர் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாதீர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை


திருவள்ளூர் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாதீர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
x
தினத்தந்தி 28 Aug 2018 10:15 PM GMT (Updated: 28 Aug 2018 8:04 PM GMT)

வி‌ஷத்தைவிட அதிக நச்சுத்தன்மை கொண்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் அறிவுரை வழங்கினார்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் சணல், துணிப்பைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்கள் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயகுமார் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு முன்னிலை வகித்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு துணி மற்றும் சணல் பைகளை வழங்கினார்.

பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் கூறியதாவது:– பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் கேன்சர் போன்ற கொடிய நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளதாக உலக சுகாதாரத்துறை அறிவித்துள்ளதை சுட்டிகாட்டினார்.

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி விட்டு, அதை வீசி விடுவதால் அவை பூமியில் மக்காமல் அப்படியே இருந்துவிட்டு சுற்றுப்புற சூழலை பாழாக்கிவிடுகிறது. இப்படி வி‌ஷத்தை விட அதிக நச்சுத்தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

அதற்கு மாறாக சணல் மற்றும் துணிப்பைகளை பயன்படுத்தினால் சுற்று சூழலுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. மனிதர்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் எந்தவித கெடுதலும் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் இளநிலை உதவியாளர்கள் சிவசங்கரன், மோகனகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story