திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 3 Sept 2018 6:15 AM IST (Updated: 3 Sept 2018 5:48 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. கோவிலுக்கு தினமும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் நகரின் மையப்பகுதியில் உள்ள அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர். கோவிலில் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் சிலர் கிரிவலம் சென்று, கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்கங்களை வழிபட்டனர்.

மேலும் நேற்று கோகுலாஷ்டமி என்பதாலும் சிலர் கிருஷ்ணன், பெருமாள் கோவில்களுக்கு சென்றுவிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

Next Story