பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம்-சான்றிதழ்


பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம்-சான்றிதழ்
x
தினத்தந்தி 7 Sep 2018 9:45 PM GMT (Updated: 7 Sep 2018 8:19 PM GMT)

பெரம்பலூர் மாவட்ட பள்ளி மாணவர்கள் இடையே தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம்-சான்றிதழ் வழங்கப்பட்டது.

பெரம்பலூர், 


பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் பெரம்பலூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகள் இடையே விளையாட்டு போட்டி கடந்த 3-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. கடந்த 3-ந்தேதி கால்பந்து, வாலிபால், கோ-கோ, டென்னிஸ், மேஜை பந்து மற்றும் இறகு பந்து ஆகிய போட்டிகளும், கடந்த 4-ந்தேதி வளைகோல் பந்தாட்டம், கூடைப்பந்து, கபடி, ஹேண்ட் பால், பூப்பந்து ஆகிய போட்டிகளும், கடந்த 5-ந்தேதி கேரம், வளையப்பந்து மற்றும் சாலையோர சைக்கிள் போட்டிகளும் 14,17,19 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகளின் அணிகளுக்கு தனித்தனியே நடத்தப்பட்டது.

நேற்று முன்தினம் மாணவிகளுக்கான தடகள போட்டிகளும், நேற்று மாணவர்களுக்கான தடகள போட்டிகளும் நடைபெற்றன. நேற்று 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான 100, 200, 400, 800 மீட்டர் ஓட்டமும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. 17, 19 வயதிற்குட்பட்டோருக்கான மாணவிகள் பிரிவில் 100, 200, 400, 800 மீட்டர் ஓட்டமும், 100 மீட்டர் தடை ஓட்டமும், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய தடகள போட்டிகளும் நடைபெற்றன.

இதில் பெரம்பலூர், குன்னம் குறுட்ட அளவில் நடைபெற்ற தடகள போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மொத்தம் 330 மாணவர்கள் கலந்து கொண்டனர். நேற்று நடந்த மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் முதல் இடத்தை பிடித்தவர்களுக்கு தங்க பதக்கமும், சான்றிதழும், 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு வெள்ளி பதக்கமும், சான்றிதழும், 3-ம் இடத்தை பிடித்தவர்களுக்கு வெண்கல பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டன. நேற்றுடன் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நிறைவு பெற்றன. 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் குழு போட்டிகளில் முதல் இடத்தை பிடித்த அணியும், தடகள போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளும் அடுத்த மாதம் (அக்டோபர்) பெரம்பலூரில் நடைபெறவுள்ள மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story