வாலிபரை கொன்று பிணம் வீச்சு யார் அவர்? போலீசார் விசாரணை


வாலிபரை கொன்று பிணம் வீச்சு யார் அவர்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 18 Sep 2018 9:30 PM GMT (Updated: 18 Sep 2018 10:40 PM GMT)

தேவதானப்பட்டி அருகே கொடைக்கானல் மலைப்பகுதியில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவதானப்பட்டி, 


திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு துணை நடிகையுடன் தொடர்பு கொண்ட கார் டிரைவரை ஒரு கும்பல் கொலை செய்து பிணத்தை வீசி சென்றது. அதனை போலீசார் கைப்பற்றி கொலையாளிகளை கைது செய்தனர். இதேபோல் மதுரையை சேர்ந்த வாலிபர் ஒருவரை கொலை செய்து கொடைக்கானல் மலைப்பாதையில் பிணத்தை வீசி சென்றனர். அவரை கொன்ற கொலையாளிகளை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் நேற்று தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே கொடைக்கானல் மலைப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். டம்டம் பாறை பகுதியில் பட்டறைபாறை அருகே சுமார் 10 அடி பள்ளத்தில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசாருக்கு வனத்துறையினர் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாறன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் ஊதா நிற பனியன், கறுப்பு நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். அவருடைய உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால் சில நாட்களுக்கு முன்பு கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். சம்பவ இடத்துக்கு தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதைத்தொடர்ந்து அவருடைய பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். வாலிபரின் பிணம் கிடந்த பகுதியில் சாலையோரத்தில் ரத்தம் உறைந்து கிடந்தது. எனவே அவரை அந்த பகுதிக்கு அழைத்து வந்து கொலை செய்துவிட்டு, பிணத்தை மலைப்பகுதியில் மர்ம நபர்கள் வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்து பிணத்தை வீசிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story