இலங்கையில் 53 படகுகள் மட்டுமே நல்ல நிலையில் உள்ளன; மீன்துறை அதிகாரி தகவல்

இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த 165 படகுகளில் 53 படகுகள் மட்டுமே மீட்டு நல்ல நிலையில் உள்ளதாக மீன்துறை அதிகாரி தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
இலங்கை அரசு கடந்த ஆண்டு 2 புதிய சட்டங்களை அமல்படுத்தி உள்ளது. இதன்படி எல்லைதாண்டி வரும் மீனவர்களை கைது செய்வதுடன், படகுகளை பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது என்று சட்டம் இயற்றி அமல்படுத்தி உள்ளது. இந்த சட்டத்தை முழுமையாக செயல்படுத்தும் வகையில் அதற்கு முன்னதாக கடந்த 2015–ம் ஆண்டு முதல் சிறைபிடிக்கப்பட்டுள்ள 173 படகுகளை விடுவிக்க கடந்த மாதம் 7–ந்தேதி புதிய உத்தரவு பிறப்பித்தது.
இதனை தொடர்ந்து இலங்கையில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள 173 படகுகளை மீட்டு கொண்டுவரும் வகையில் அதன் தன்மை குறித்து ஆராய்வதற்காக மீன்துறை கூடுதல் இயக்குனர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் அதிகாரிகள், மீனவர்கள், ஆசாரிகள், மெக்கானிக்குகள் கொண்ட 16 பேர் குழுவினர் இலங்கை சென்றனர். இவர்கள் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள 173 படகுகளில் புதுச்சேரியை சேர்ந்த 8 படகுகள் தவிர தமிழகத்தை சேர்ந்த 165 படகுகளின் தற்போதைய நிலையை ஆய்வு செய்தனர்.
இலங்கை புத்தளம், கல்பிட்டியா, தலைமன்னார், கிராஞ்சி, காரைநகர், காங்கேசன்துறை, திரிகோணமலை ஆகிய பகுதிகளுக்கு சென்று இந்த ஆய்வினை மேற்கொண்டனர். இதில் 44 விசைப்படகுகளும், 9 நாட்டுப்படகுகளும் என மொத்தம் 53 படகுகள் மட்டுமே திருப்பி கொண்டு வர தகுதியான நல்ல நிலையில் உள்ளதை கண்டறிந்துள்ளனர். அதிலும் குறிப்பாக திரிகோணமலை, காங்கேசன்துறை, கல்பெட்டியா ஆகிய பகுதிகளில் உள்ள 16 படகுகள் மட்டுமே இலங்கை சென்றதும் உடனடியாக கொண்டுவரக்கூடிய நிலையில் உள்ளன. காரைநகர், கிராஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள படகுகள் மிகுந்த சேதமடைந்த படகுகளின் இடையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இவற்றை லாவகமாக இழுத்து கரைக்கு கொண்டுவர ஓரிரு நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனால் படகுகளை மீட்க செல்லும்போது மேலும் ஓரிரு நாட்கள் தங்கி பத்திரமாக மீட்டு கொண்டுவர அனுமதிக்கக்கோரி வெளியுறவுத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த அனுமதி கிடைத்ததும் ஓரிரு வாரத்திற்குள் குழு இலங்கை சென்று படகுகளை மீட்டு கொண்டுவர உள்ளது. இந்த தகவலை இலங்கை சென்று திரும்பிய மீன்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.