வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 24 Nov 2018 11:00 PM GMT (Updated: 24 Nov 2018 5:24 PM GMT)

பென்னாகரத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பென்னாகரம், 

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மகபூப்நகரை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 70). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவருடைய மனைவி லட்சுமி (65). நேற்று அதிகாலை 3 மணியளவில் இவர்கள் 2 பேரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

பின்னர் அவர்கள் தூங்கி கொண்டிருந்த லட்சுமியின் கழுத்தில் இருந்த 4 பவுன் நகையை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் என கூச்சலிட்டார். இதையடுத்து அந்த மர்ம நபர்கள் 2 பேரும் அங்கிருந்து நகையுடன் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

இதே போல அந்த பகுதியில் அடுத்தடுத்த 4 வீடுகளுக்குள் புகுந்து மர்ம நபர்கள் திருட முயன்றுள்ளனர். ஆனால் நகை, பணம் எதுவும் கிடைக்காததால் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வி.அக்ரஹாரத்திலும் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர். பென்னாகரம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Next Story