கண்டமங்கலம் அருகே பயங்கரம்: பெட்ரோல் ஊற்றி தொழிலாளி மீது தீவைப்பு - கள்ளக்காதலனுடன் மனைவி கைது


கண்டமங்கலம் அருகே பயங்கரம்: பெட்ரோல் ஊற்றி தொழிலாளி மீது தீவைப்பு - கள்ளக்காதலனுடன் மனைவி கைது
x
தினத்தந்தி 28 Nov 2018 10:00 PM GMT (Updated: 28 Nov 2018 8:45 PM GMT)

கள்ளக்காதலை கண்டித்ததால் பெட்ரோல் ஊற்றி தொழிலாளி மீது தீவைத்த மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

கண்டமங்கலம்,

கண்டமங்கலம் அருகே உள்ள பக்கிரிப்பாளையத்தை சேர்ந்தவர் ஜாகீர்உசேன் (வயது 45). தொழிலாளி. இவருடைய மனைவி சபீனா பானு (வயது 35). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

இந்தநிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வேலைபார்ப்பதற்காக ஜாகீர் உசேன் வெளிநாட்டுக்கு சென்றார். இதனால் தனிமையில் இருந்த சபீனா பானுவுக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த யுவராஜ் (35) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது.

இதுபற்றி ஜாகீர் உசேனுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். கள்ளக்காதலை கைவிடுமாறு மனைவி சபீனா பானுவை கண்டித்தார். ஆனால் அவர் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து யுவராஜுடன் அவர் தொடர்பு வைத்து இருந்தார். இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதனால் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினமும் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ஜாகீர்உசேனுக்கும் சபீனா பானுவுக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் கணவருடன் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிய சபீனா பானுவை ஜாகீர்உசேன் சமரசம் செய்தார்.

இந்தநிலையில் நேற்று காலை ஜாகீர் உசேன் உடல் எரிந்த நிலையில் வீட்டுக்குள் இருந்தபடி அலறினார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். ஜாகீர் உசேன் உடலில் தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தீயை அணைத்து அவரை மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உடல் கருகிய நிலையில் ஜாகீர் உசேன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கவலைக்கிடமான நிலையில் உள்ள ஜாகீர் உசேனிடம் கண்டமங்கலம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர். அப்போது அவர், தனது மனைவிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த யுவராஜுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதை கண்டித்ததாகவும், இந்த விவகாரத்தில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து தன்னை எரித்து கொல்ல முயன்றதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக கண்டமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சபீனா பானு, அவரது கள்ளக்காதலன் யுவராஜ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story