உளுந்தூர்பேட்டை அருகே: ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி - போலீசார் விசாரணை


உளுந்தூர்பேட்டை அருகே: ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 9 Dec 2018 10:00 PM GMT (Updated: 9 Dec 2018 5:45 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி பலியானார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 40). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி மீனா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலையில் வெங்கடேசன் வீட்டில் உள்ளவர்களிடம் வெளியே சென்றுவருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நேற்று காலை வரை அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் வெங்கடேசனை தேடினர். அப்போது அங்குள்ள ஏரிக்கரையில் வெங்கடேசனின் ஆடை மற்றும் காலணி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், வெங்கடேசன் நீரில் மூழ்கியிருக்கலாம் என்று சந்தேகித்தனர். இதையடுத்து உறவினர்கள் சிலர் ஏரிக்குள் இறங்கி அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை.

பின்னர் இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வெங்கடேசனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதற்கிடையே இது பற்றி தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் வெங்கடேசன் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

இதையடுத்து வெங்கடேசனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story