மரத்தில் கார் மோதி 3 வாலிபர்கள் பலி துக்க வீட்டிற்கு சென்று விட்டு திரும்பிய போது பரிதாபம்


மரத்தில் கார் மோதி 3 வாலிபர்கள் பலி துக்க வீட்டிற்கு சென்று விட்டு திரும்பிய போது பரிதாபம்
x
தினத்தந்தி 13 Dec 2018 10:15 PM GMT (Updated: 13 Dec 2018 6:53 PM GMT)

திருவரங்குளம் அருகே துக்க வீட்டிற்கு சென்று விட்டு திரும்பிய போது மரத்தில் கார் மோதியதில் 3 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

திருவரங்குளம்,

புதுக்கோட்டை மச்சுவாடி ஜீவாநகர் பகுதியை சேர்ந்த முகமதுகனி மகன் முகமது பஷீர் (வயது 27). இவரது நண்பரான அறந்தாங்கி பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் இறந்து போனார். இந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முகமது பஷீர் தனது நண்பர்களான புத்தாம்பூர் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் கார்த்திகேயன் (26), லேணா விளக்கு பகுதியை சேர்ந்த செல்வகணபதி (27), நேமத்தான்பட்டியை சேர்ந்த முருகானந்தம்(27), மணிகண்டன் ஆகிய 5 பேரும் ஒரு காரில் அறந்தாங்கிக்கு புறப்பட்டு சென்றனர்.

பின்னர் அறந்தாங்கியில் சந்திரசேகரனின் இறுதி சடங்குகளை முடித்துவிட்டு, முகமது பஷீர் உள்பட 5 பேரும் காரில் புதுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை முகமது பஷீர் ஓட்டினார். கார் புதுக்கோட்டை அருகே உள்ள குளவாய்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது.

இதில் முகமது பஷீர், கார்த்திகேயன், செல்வகணபதி ஆகிய 3 பேர் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் முருகானந்தம், மணிகண்டன் ஆகியோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த னர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து வல்லத்திராக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் படுகாயமடைந்த முருகானந்தம், மணிகண்டன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே இறந்த முகமதுபஷீர், கார்த்திகேயன், செல்வகணபதி ஆகிய 3 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வல்லத்திராக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வல்லத்திராக்கோட்டை பகுதியில் சாலையோர மரத்தில் கார் மோதியதில் 3 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story