வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா - ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்


வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா - ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 24 Dec 2018 11:30 PM GMT (Updated: 24 Dec 2018 8:55 PM GMT)

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்து உள்ளனர்.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள வேளாங் கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக, சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாக விளங்குகிறது. கீழை நாடுகளின் லூர்து நகர் என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது. அன்னை மரியின் புகழ் பரப்பும் புண்ணிய தலமாகவும், வேளாங்கண்ணி விளங்குகிறது.

கிறிஸ்தவ ஆலய கட்டிடக்கலைக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய பசிலிக்கா என்ற பெருமைமிகு பிரமாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி பேராலயமும் ஒன்று என்பது சிறப்பாகும். மேலும் வேளாங்கண்ணி பேராலயம், மோர்க்கார சிறுவனுக்கு, அன்னை மரியாள் காட்சி தந்த தலமாகவும் விளங்குகிறது. பேராலயத்தின் அருகிலேயே வங்கக்கடல் அமைந்துள்ளது, இப்பேராலயத்திற்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாக உள்ளது.

இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுதோறும் ஏசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். துன்பத்தில் துவண்டு அமைதியை தேடி மன்றாடி வருபவர்களின் மனதை ஆற்றுப்படுத்தி புதுவாழ்விற்கு வழிகாட்டி வரும் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், ஏசு பிறந்தநாளான கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுவது வழக்கம்.

இதையொட்டி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தையநாள் நள்ளிரவில் ஏசு பிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். அப்போது சிறப்பு பிரார்த்தனை கூட்டம் மற்றும் ஜெப வழிபாடுகள் நடைபெறும். அதன்படி சிறப்பு பிரார்த்தனை கூட்டம் மற்றும் ஜெப வழிபாடுகள் நடந்தது. இந்த சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஜெப வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பு இருந்தே தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலத்தை சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்து உள்ளனர்.

இந்த நிலையில் வேளாங் கண்ணி விண்மீன் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடில் அமைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நுழைவு வாயில் நடுத்திட்டு கோவிலுக்கு எதிர்புறம் அமைக்கப்பட்டுள்ளது. பேராலயத்தை சுற்றியுள்ள செடிகளில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதனால் வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றிலும் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று இரவு கிறிஸ்தவ மக்கள் சிலுவை பாதையில் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பண்டிகையை முன்னிட்டு இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பலியும், 8 மணிக்கு கூட்டு திருப்பலியும் நடைபெற உள்ளது.

வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் மற்றும் விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள் வங்கக்கடலில் குளித்து மகிழ்வது வழக்கம். அவ்வாறு குளிக்கும் பக்தர்கள் கடலின் ஆழமான பகுதிகளுக்கு செல்லாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து கடற்கரை பகுதியில் கடலில் குளிப்பவர்கள் ஆழமான பகுதிக்கு செல்லக்கூடாது என்று எச்சரிக்கை பலகைகள் வைத்தும், ஒலிபெருக்கி மூலமும் போலீசார் அறிவித்து வருகிறார்கள். மேலும், வேளாங்கண்ணியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story