மெரினா கடற்கரையை தூய்மையாக்க விதிகளை உருவாக்க வேண்டும் மாநகராட்சிக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


மெரினா கடற்கரையை தூய்மையாக்க விதிகளை உருவாக்க வேண்டும் மாநகராட்சிக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 10 Jan 2019 10:15 PM GMT (Updated: 10 Jan 2019 7:36 PM GMT)

மெரினாவை தூய்மையாக வைத்துக்கொள்ள விதிகளை உருவாக்கி, அதுதொடர்பான வரைவு அறிக்கையை மாநகராட்சி ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

ஆழ்கடல் மீன்பிடிப்பு தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மீனவர்கள் நல அமைப்பின் தலைவரான பீட்டர் ராயன், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர், மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் மீனவர் சங்கத்தினரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக மாநகராட்சி மற்றும் காவல்துறை ஆணையர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை ஒழுங்குப்படுத்த புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தனர்.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மெரினா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு மற்றும் தூய்மை பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் கார்த்திக்கேயன் நேரில் ஆஜராகி அறிக்கை சமர்ப்பித்தார்.

அதில், கடலோர ஒழுங்குமுறை சட்டத்திற்குட்பட்டு ரூ.40 கோடி செலவில் மெரினா கடற்கரையில் உணவகங்கள், மின்விளக்குகள், இருசக்கர வாகன நிறுத்துமிடங்கள், பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். அப்போது நீதிபதிகள், ‘மெரினாவில் உள்ள உணவகங்களினால் கடல்வாழ் உயிரினங்களான கடல் ஆமைகள், மீன்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் திட்டமிடப்பட்டுள்ளதா?’ என்று கேள்வி எழுப்பினர்.

வரைவு அறிக்கை

அப்போது அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால், ‘மெரினாவை தூய்மைப்படுத்தவும், அங்குள்ள கடைகளை ஒழுங்குப்படுத்தவும் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘மெரினா கடற்கரையில் உள்ள சுமார் 2 ஆயிரம் கடைகளை அகற்றிவிட்டு, வியாபாரிகளின் கருத்துக்களை கேட்டு புதிதாக விதிமுறைகளை வகுத்து, குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கடைகளுக்கு அனுமதியளிக்க வேண்டும். மெரினாவை தூய்மையாக வைத்துக்கொள்ள விதிகளை உருவாக்கி, அதுதொடர்பான வரைவு அறிக்கையை மாநகராட்சி ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற பிப்ரவரி 5-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Next Story