குந்தாரப்பள்ளி சந்தையில் ரூ.9 கோடிக்கு ஆடுகள் விற்பனை


குந்தாரப்பள்ளி சந்தையில் ரூ.9 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 11 Jan 2019 9:45 PM GMT (Updated: 11 Jan 2019 6:45 PM GMT)

குந்தாரப்பள்ளி சந்தையில் ரூ.9 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

குருபரப்பள்ளி, 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாட்டுப்பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் வரும் காணும் பொங்கல் விழாவில், மக்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபடுவது வழக்கம். இதற்காக பொங்கலை முன்னிட்டு வரும் வாரசந்தைகளில் ஆடுகள், நாட்டுக் கோழிகள் விற்பனை அதிகரிக்கும். இதற்காக கிராமப்புறங்களில் பலர் ஆடுகள், கோழிகளை வளர்த்து சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

அதன்படி நேற்று கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி சந்தைக்கு அதிக அளவில் வியாபாரிகள் ஆடு, கோழிகளை கொண்டு வந்தனர். இதே போல், வெளி மாவட்டங்கள் மட்டுமன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அதிக அளவில் ஆடுகளை குந்தாரப்பள்ளி சந்தைக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஆடுகளை வாங்கி செல்ல வேலூர், தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். ஒரு ஆடு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது.

இது குறித்து குந்தாரப்பள்ளியை சேர்ந்த ஆட்டு வியாபாரிகள் சிலர் கூறியதாவது:- வருகிற 17-ந் தேதி அன்று காணும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பெரும்பாலான வீடுகளில் அசைவ உணவு சமைப்பது வழக்கம். இதே போல் கிராமங்களில் இஷ்ட தெய்வங்களுக்கு ஆடுகளை வெட்டி, பங்கிட்டு பிரித்து கொள்வார்கள். இன்று(நேற்று) ஒரு நாள் மட்டும் ரூ.9 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது. ஒரு ஜோடி ஆடுகள் குறைந்தபட்சம் ரூ.12 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை விற்பனையானது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story