தர்மபுரி,
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களிலும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பகல்நேர பராமரிப்பு மையங்கள் மற்றும் ஆதாரவள மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்பு கல்வியும், தேவையான உடல் இயக்க பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி 2018–2019–ம் ஆண்டின் கணக்கெடுப்புபடி 14 வயதிற்குட்பட்ட 3083 மாற்றுத்திறனுடைய குழந்தைகள் மாவட்டம் முழுவதும் கண்டறியப்பட்டனர். இவர்கள் முறையான பள்ளிகளிலும், பகல்நேர பராமரிப்பு மையங்களிலும் பயிற்சி பெற்று வருகிறார்கள். இவர்களில் கடுமையான பாதிப்பு உள்ளவர்களுக்கு வீடுகளிலேயே பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் 2018–2019–ம் ஆண்டில் கண்டறியப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் பங்கேற்ற மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. இந்த முகாம்களில் பங்கேற்ற மாற்றுத்திறன் கொண்டவர்களில் தேர்வு செய்யப்பட்ட 116 பேருக்கு உதவி உபகரணங்கள் வழங்கவும், 12 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். 188 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.
இதன்படி 116 பேருக்கு மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற நிறுவனம் மூலமாக உதவி உபகரணங்கள் பெறப்பட்டது. இதற்காக ரூ.4 லட்சத்து 35 ஆயிரம் நிதி ஒதுக்கீடு மாவட்ட திட்ட இயக்கத்தில் பெறப்பட்டது. இதன்படி மேற்கண்ட 116 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு 219 உதவி உபகரணங்களை தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் மலர்விழி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர்கள் வெங்கடேசன், தங்கவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகந்தி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.