செந்துறை அருகே பள்ளிகள் திறக்கப்படாததை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


செந்துறை அருகே பள்ளிகள் திறக்கப்படாததை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 25 Jan 2019 11:00 PM GMT (Updated: 25 Jan 2019 5:17 PM GMT)

செந்துறை அருகே பள்ளிகள் திறக்கப்படாததை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செந்துறை, 

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உஞ்சினி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட கிராமப்புற ஏழை மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த 4 நாட்களாக ஆசிரியர்கள் ஊதிய உயர்வு மற்றும் பென்ஷன் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஆசிரியர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை.

கடந்த 3 நாட்களாக பள்ளிக்கு வந்த மாணவர்கள் பள்ளி திறக்காததால் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பி சென்றனர். இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்றும் ஆசிரியர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை. வழக்கம்போல நேற்றும் பள்ளிக்கு மாணவர் வந்தனர். ஆனால் ஆசிரியர்கள் யாரும் வராததால், பள்ளி பூட்டப்பட்டு இருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவ- மாணவிகள் ஒன்று சேர்ந்து உஞ்சினி திரவுபதி அம்மன் கோவில் முன்பு செந்துறை- உடையார்பாளையம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் கூறியதாவது:-

ஏழை மாணவர்கள் ஆன நாங்கள் அரசு பள்ளிகளில் படிக்கிறோம். சம்பளம் பற்றவில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் பிள்ளைகள் கான்வென்ட் பள்ளிகளில் படிக்கிறார்கள். அதனால் அவர்கள் எங்களது படிப்பை பற்றி கவலைப்படாமல் தொடர் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். இன்று (சனிக்கிழமை) குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராதது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. ஆகவே ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பள்ளிக்கு வரவேண்டும். அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி ஆசிரியர்களை பள்ளிக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பள்ளிக்கு வராத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடர்ந்து இதனை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மாணவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து மறியலை கை விட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story