சென்னிமலை அருகே, குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் அரசு பஸ்சை சிறைபிடித்ததால் பரபரப்பு


சென்னிமலை அருகே, குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் அரசு பஸ்சை சிறைபிடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 28 Jan 2019 3:30 AM IST (Updated: 27 Jan 2019 10:18 PM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை அருகே, குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் அரசு பஸ்சும் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னிமலை, 

சென்னிமலை அருகே பனியம்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட துலுக்கம்பாளையம் பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சீராக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் காலிக்குடங்களுடன் துலுக்கம்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதிக்கு நேற்று காலை 9 மணி அளவில் வந்தனர். பின்னர் அவர் கள் சீராக தண்ணீர் வழங்க வேண்டும் என்று கோஷமிட்டப்படி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்றையும் பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சென்னிமலை போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், குடிநீர் சரிவர கிடைக்காததால் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.

இதனால் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தோம். இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு 10 நாட்களில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை குடிநீர் வழங்கப்படவில்லை. அதனால்தான் இன்று (நேற்று) சாலை மறியலில் ஈடுபட்டோம் என்றனர்.

அதற்கு அதிகாரிகள் துலுக்கம்பாளையம் பகுதியில் விரைவில் குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், காலை 10 மணி அளவில் சிறைபிடித்த அரசு பஸ்சை விடுவித்ததோடு, சாலைமறியல் போராட்டத்தையும் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story