அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொண்ட இளம்பெண் திடீர் சாவு


அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொண்ட இளம்பெண் திடீர் சாவு
x
தினத்தந்தி 10 Feb 2019 11:15 PM GMT (Updated: 10 Feb 2019 9:16 PM GMT)

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொண்ட இளம்பெண் திடீரென்று இறந்தார். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

நாகர்கோவில், 

நித்திரவிளை அருகே உள்ள எஸ்.டி.மங்காடு பகுதியை சேர்ந்தவர் விஜய், எல்லை பாதுகாப்பு படை வீரர். இவருடைய மனைவி ஆஷா (வயது 29), பட்டதாரி பெண். இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. 3 வயதில் மகள் இருக்கிறாள். இந்த நிலையில் ஆஷா கர்ப்பம் தரித்தார்.

நிறைமாத கர்ப்பிணியான அவரை நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 2-ந்தேதி அனுமதித்தனர். மறுநாள் அவருக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. 2 குழந்தைகள் இருப்பதால், ஆஷா குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொள்ள சம்மதித்தார்.

அதைத்தொடர்ந்து அவருக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் நடந்தது. அதன்பிறகு ஆஷாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. உடனே டாக்டர்கள் ஆஷாவை பரிசோதனை செய்தபோது, அவருக்கு வயிற்றில் பழுப்பு இருப்பதாக தெரிவித்தனர். அதற்காக ஆஷாவுக்கு மீண்டும் ஆபரேஷன் நடந்தது. அதன்பிறகும் ஆஸ்பத்திரியில் ஆஷா தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை ஆஷா திடீரென இறந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும், அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆஷாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். டாக்டர்களின் தவறான ஆபரேஷனால் தான் ஆஷா இறந்து விட்டார் என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் அவர்கள், குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொண்ட ஆஷா சாவில் சந்தேகம் உள்ளது. எனவே உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது அதை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். அவரது சாவுக்கு காரணம் என்ன என்பதை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பின்னரே ஆஷாவின் உடலை வாங்குவோம் என்று கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆசாரிபள்ளம் போலீசார் அங்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதை அவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே ஆஷா உயிரிழந்த சம்பவம் குறித்த தகவல் காஷ்மீரில் உள்ள அவரது கணவர் விஜய்க்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

எங்களது ஆஸ்பத்திரியில் ஆஷாவுக்கு சுகப்பிரசவம் நடந்தது. அதைத்தொடர்ந்து 3-வது நாளில் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யப்பட்டது. அதன்பிறகு அவர் வார்டுக்கு கொண்டுவரப்பட்டார். வார்டுக்கு வந்தபிறகு அவருக்கு திடீரென வயிற்றுவலியும், காய்ச்சலும் ஏற்பட்டது. உடனே அவருக்கு டாக்டர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தபோது வயிற்றில் பழுப்பு இருந்தது தெரிய வந்தது. 8-வது நாளில் பழுப்பை அகற்றுவதற்கான ஆபரேஷன் செய்யப்பட்டது.

இந்தநிலையில் இன்று (அதாவது நேற்று) காலை அவருக்கு திடீரென இருதயம் செயல் இழந்தது. செயல் இழந்த இருதயத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் முடியாமல் இறந்து விட்டார். இருதயம் செயல் இழந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனையில்தான் தெரிய வரும். பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு டீன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக ஆஷாவின் தந்தை தங்கப்பன் ஆசாரிபள்ளம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சந்தேக மரணம் என்று உதவி சூப்பிரண்டு ஜவகர் வழக்குப்பதிவு செய்தார். இது தொடர்பாக நாகர்கோவில் உதவி கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் விசாரணை நடத்துகிறார்.

Next Story