திருமணம் செய்து வைக்க மறுத்ததால் பெண்ணின் தந்தை முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபர் தேவகோட்டையில் பரபரப்பு


திருமணம் செய்து வைக்க மறுத்ததால் பெண்ணின் தந்தை முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபர் தேவகோட்டையில் பரபரப்பு
x
தினத்தந்தி 13 Feb 2019 11:15 PM GMT (Updated: 13 Feb 2019 10:20 PM GMT)

தேவகோட்டையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்தால் அந்த பெண்ணின் தந்தை முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

தேவகோட்டை,

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் சஞ்சய் குமார் (வயது 24). இவர் கடந்த 2015–ம் ஆண்டு தேவகோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். அப்போது அதே கல்லூரியில் படித்த தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அதன் பின்னர் காதலாக மாறியது.

இந்த நிலையில் கடந்த 2016–ம் ஆண்டு அவர்கள் கல்லூரி படிப்பை முடித்தனர். இதையடுத்து தான் காதலித்து வந்த அந்த பெண்ணை திருமணம் செய்வதற்கு சஞ்சய்குமார் பல முறை முயற்சி செய்து வந்தாராம். மேலும் அவரது பெற்றோர் அந்த பெண் வீட்டிற்கு சென்று முறைப்படி பெண் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் பெண் தர மறுத்து விட்டதாக தெரிகிறது.

இதனால் மனக் கவலையில் இருந்து வந்த சஞ்சய்குமார் நேற்று அந்த பெண்ணின் தந்தை நடத்தி வந்த கடைக்கு சென்று அந்த கடை முன்பு தனது காதலியுடன் நான் பேச வேண்டும் என்று கூறி, மண்எண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதையடுத்து அங்கிருந்த வியாபாரிகள் அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி அவரை தேவகோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் சஞ்சய்குமார், அவரது பெற்றோர் மற்றும் அந்த பெண்ணின் பெற்றோர் ஆகியோரை வரவழைத்து அவர்களிடம் தகுந்த ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைத்தனர்.


Next Story