குர்லாவில் மகனை கொன்று தாய் தற்கொலை போலீஸ் விசாரணை


குர்லாவில் மகனை கொன்று தாய் தற்கொலை போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 14 Feb 2019 12:00 AM GMT (Updated: 13 Feb 2019 10:48 PM GMT)

குர்லாவில் மகனை கொன்று தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

குர்லாவில் மகனை கொன்று தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் நிறுவன ஊழியர்

மும்பை குர்லா மேற்கு வினோபாவே நகரில் உள்ள குருதத் சொசைட்டி கட்டிடத்தில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் தீபக். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி அனுஜா (வயது25). இவர்களுக்கு 3 வயதில் ஸ்ரீ என்ற மகன் இருந்தான். தீபக்கின் தாய் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் அவர் வேலை முடிந்து வீடு திரும்பினார்.

தூக்கில் தொங்கினார்

அப்போது, கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. வெகுநேரமாக தட்டியும் அனுஜா கதவை திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது, அறைக்குள் அனுஜா தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். அருகில் உள்ள படுக்கையில் சிறுவன் ஸ்ரீயும் மயங்கிய நிலையில் கிடந்தான்.

இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மகனை கொன்று தற்கொலை

விசாரணையில், அனுஜா தனது மகன் ஸ்ரீயை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது இந்த விபரீத முடிவுக்கான காரணத்தை கண்டறிய கணவர் தீபக்கிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story