கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; இன்சூரன்ஸ் முகவர் சாவு


கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; இன்சூரன்ஸ் முகவர் சாவு
x
தினத்தந்தி 18 Feb 2019 10:15 PM GMT (Updated: 18 Feb 2019 7:08 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இன்சூரன்ஸ் முகவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 41). இன்சூரன்ஸ் முகவர். இவர், கும்மிடிப்பூண்டி பஜாரில் டைல்ஸ் கடையும் நடத்தி வந்தார். சங்கருக்கு திருமணமாகி கலைமதி (32) என்ற மனைவியும், அரிஷ் (7) என்ற மகனும், ரேஸ்மி (4) என்ற மகளும் உள்ளனர்.

நேற்று கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் இருந்து சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியே கும்மிடிப்பூண்டி பஜாருக்கு மோட்டார் சைக்கிளில் சங்கர் சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் மேம்பால வேலை நடைபெற்று வருவதால் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அருகே சர்வீஸ் சாலையில் வாகனங்கள் அனைத்தும் திருப்பி விடப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் சர்வீஸ் சாலையில் மோட்டார் சைக்கிளை சங்கர் ஓட்டி செல்லும் போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரி மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சங்கர், தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story