காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்


காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
x
தினத்தந்தி 27 Feb 2019 11:00 PM GMT (Updated: 27 Feb 2019 9:20 PM GMT)

காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம் அடைந்தது.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் கயிறுகாரன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 25). எம்.ஏ. பட்டதாரியான இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருந்து கம்பெனியில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த திவ்யா (20) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. திவ்யா தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் மயக்கவியல் துறையில் டிப்ளமோ படித்து வந்தார். இவர் தினமும் காவேரிப்பட்டணத்தில் இருந்து தர்மபுரிக்கு பஸ்சில் செல்லும்போது கார்த்திக்கை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்த சந்திப்பு நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக்கொண்டனர்.

இவர்களின் காதல் குறித்து திவ்யாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மகளை கண்டித்துள்ளனர். ஆனாலும் காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதனால் திவ்யாவின் பெற்றோர் தனது மகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதை அறிந்த திவ்யா அதுகுறித்து தனது காதலன் கார்த்திக்கிடம் கூறி அழுதுள்ளார்.

இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு தர்மபுரி வந்த திவ்யா தனது காதலன் கார்த்திக்குடன் தலைமறைவானார். இதனால் அதிர்ச்சி அடைந்த திவ்யாவின் பெற்றோர் தனது மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காதலர்கள் இருவரும் கடந்த 24-ந் தேதி சேலத்தில் உள்ள முருகன் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் நேற்று காலை காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

இதையடுத்து காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார்் இருவரது பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இருவருக்கும் திருமண வயது பூர்த்தி அடைந்து விட்டதால் சட்டப்படி அவர்களை யாரும் மிரட்டக் கூடாது, மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

பின்னர் காதலர்கள் போலீசாருக்கு நன்றி தெரிவித்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் காரிமங்கலம் போலீஸ் நிலைய பகுதியில் இரு வீட்டாரின் கூச்சல், குழப்பத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story