பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கோரி மனிதசங்கிலி - விழுப்புரத்தில் அற்புதம்மாள் பேட்டி


பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கோரி மனிதசங்கிலி - விழுப்புரத்தில் அற்புதம்மாள் பேட்டி
x
தினத்தந்தி 28 Feb 2019 4:30 AM IST (Updated: 28 Feb 2019 3:24 AM IST)
t-max-icont-min-icon

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய கோரி மனிதசங்கிலி நடைபெற இருப்பதாக விழுப்புரத்தில் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கூறினார்.

விழுப்புரம், 

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று பேரறிவாளனின் தாயார்அற்புதம்மாள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். நேற்று விழுப்புரத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அற்புதம்மாள் கலந்துகொண்டார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி கவர்னர் கையொப்பத்துடன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பிறகு அமைச்சர்கள் இதனை கையில் எடுத்தனர். உடனடியாக அவர்கள் அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி கோப்புகளை கவர்னருக்கு அனுப்பினர். கவர்னர் கையொப்பம் இடுவார் என்று எதிர்பார்த்தோம். நானும் கவர்னரை சந்தித்து என் தரப்பு நியாயங்களை கோரிக்கையாக கொடுத்தேன். செய்வார் என்று நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் காலம்தான் கடந்து கொண்டிருக்கிறது.

எத்தனையோ காரணங்களுக்காக இவர்களின் விடுதலை தள்ளிப்போகிறது. மேலும் தள்ளிப்போகக்கூடாது. தீர்ப்பு சொன்ன நீதிபதியே, இந்த வழக்கில் பண பரிவர்த்தனை நடந்திருக்கிறது, நிறைய குளறுபடிகள் நடந்திருக்கிறது, உடனே இவர்கள் 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றார். ஒரு நீதிபதியே சொல்லிவிட்டார், இனிமேல் யாரும் மறுக்க போவதில்லை என்று நம்பிக்கையோடு இருந்தேன்.

சட்டப்படி தான் நாங்கள் கேட்கிறோம். இந்த 7 பேரும் வாழ வேண்டும், வாழ விடுங்கள். இந்த வழக்கில் விசாரணை, தண்டனை, தீர்ப்பு, தீர்ப்பை நடைமுறை படுத்துவதில் கூட சட்டத்திற்குள் அடங்காமல் போய் கொண்டிருக்கிறது. எனவே இவர்கள் 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி வருகிற (அடுத்த மாதம்) 9-ந் தேதி சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, புதுச்சேரி ஆகிய 7 நகரங்களில் மனித சங்கிலி நடத்த உள்ளோம். இதற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story