18 வயது பூர்த்தி அடைந்த மாணவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் கல்லூரி தூதர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்


18 வயது பூர்த்தி அடைந்த மாணவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் கல்லூரி தூதர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 9 March 2019 11:00 PM GMT (Updated: 9 March 2019 5:48 PM GMT)

18 வயது பூர்த்தி அடைந்த மாணவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கல்லூரி தூதர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கல்லூரி தூதர்களுடன் தேர்தல் தொடர்பான பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக பல்வேறு சிறப்பு முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் 18 வயது பூர்த்தி அடைந்த மாணவ, மாணவிகள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவர்களுக்கு கல்லூரி தூதர் கள் உறுதுணையாக இருக்க வேண்டும். கல்லூரிகளில் தேர் தலின் முக்கியத்துவம் குறித்து தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூட்டம் நடத்தப்பட வேண்டும். தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடந்த வேண்டும்.

கல்லூரி முதல்வர்கள், பொறுப்பாளர்கள் தங்களது கல்லூரிகளில் 18 வயது பூர்த்தி அடைந்த அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துள்ளார்கள் என்பதை உறுதி செய்து சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் அதிக அளவில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து, நடைபெற உள்ள தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக முத்துநகர் கடற்கரையில் நீர் சறுக்கு விளையாட்டுகளில் இலவசமாக பங்கேற்க பரிசு கூப்பன்கள் வழங்கப்படுகிறது. தற்போதும் இந்த சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளும் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கல்லூரி தூதர்கள் தங்களது நிறுவனத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள் தெரிந்துகொள்ளும் வகையில் வாக்காளர் ஒப்புகை சீட்டு எந்திரம் குறித்து தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தேர்தல் தொடர்பான பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் கல்லூரி தூதர்கள் மற்றும் அலுவலர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும். எனவே நடைபெற உள்ள தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை பதிவு செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு மற்றும் கல்லூரி தூதர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story