மோகனூர் அருகே வாகனம் மோதி தி.மு.க பிரமுகர் பலி

மோகனூர் அருகே வாகனம் மோதி தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.
மோகனூர்,
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது43). மோகனூர் முன்னாள் ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளர். இவர் நேற்று முன்தினம் மோகனூரில் இருந்து மணப்பள்ளி நோக்கி மொபட்டில் வண்டிக் கேட் அரசு மதுக்கடை அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த செல்வராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை செல்வராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மோகனூர் போலீசில் செல்வராஜின் மனைவி, தவமணி புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து செல்வராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் தி.மு.க. பிரமுகர் இறந்ததால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
Related Tags :
Next Story