தேர்தல் நடத்தை விதிகள் அமல்: சேலத்தில் அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரங்கள் அழிப்பு


தேர்தல் நடத்தை விதிகள் அமல்: சேலத்தில் அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரங்கள் அழிப்பு
x
தினத்தந்தி 12 March 2019 4:56 AM IST (Updated: 12 March 2019 4:56 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையொட்டி சேலத்தில் அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் சிலை துணியால் மறைக்கப்பட்டன.

சேலம்,

நாடாளுமன்ற தேர்தல் குறித்து நேற்று முன்தினம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் இதர அரசுத்துறை அலுவலகங்களில் வைக்கப்பட்டு இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவப்படங்கள் அகற்றப்பட்டன. அதேபோல், சேலம் மாநகராட்சி பகுதிகள் மற்றும் மேட்டூர், ஆத்தூர், எடப்பாடியில் அரசு சார்பில் நடத்தப்படும் அம்மா உணவகங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா படங்கள் மறைக்கப்பட்டன. அரசு அலுவலகங்களில் இருந்த கல்வெட்டுகள் மறைக்கப்பட்டன.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை ஆகிய 4 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு அலுவலக சுவர்களில் அரசியல் கட்சியினர் செய்திருந்த விளம்பரங்களை அழிக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். மேலும், அரசியல் கட்சியினரால் வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகளையும் அவர்கள் அகற்றினர்.

சேலம் அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள சுவரில் எழுதப்பட்டு இருந்த கட்சி விளம்பரம் வெள்ளையடித்து அழிக் கப்பட்டது. கட்சி கொடி கம்பத்தை அதன் நிர்வாகிகள் தானாக முன்வந்து கொடியை இறக்கி கம்பத்தை அகற்றினர். இதேபோல் பல்வேறு கட்சி நிர்வாகிகளும் தங்கள் கட்சி கொடி கம்பங்களை அகற்றி வருகின்றனர்.

சேலம் பள்ளப்பட்டி அருகே அரசு பணிமனை முன்பு வைக்கப்பட்டிருந்த தொழிற்சங்க பேனர்களை அந்தந்த சங்க நிர்வாகிகள் துணியை போட்டு மூடினர். மணக்காடு, மெய்யனூர், எருமாபாளையம் பகுதிகளில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு வைக்கப்பட்டிருந்த போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினரின் விளம்பர தட்டிகளும் மறைக்கப்பட்டன. மேலும், போக்குவரத்துக்கழக பணிமனைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களும் அகற்றப்பட்டன.

சேலம் அண்ணா பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மணிமண்டபத்தில் உள்ள சிலைகளை மாநகராட்சி பணியாளர்கள் துணியை கொண்டு மறைத்து மூடினர்.

பழைய பஸ்நிலையத்தில் உள்ள அண்ணாசிலை, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலை, முள்ளுவாடிகேட் பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி சிலை, 2-வது அக்ரஹாரத்தில் உள்ள காமராஜர் சிலை மற்றும் மாநகரில் பல்வேறு இடங்களில் உள்ள எம்.ஜி.ஆர்., ராஜாஜி, காமராஜர் ஆகிய தலைவர்களின் சிலைகளையும் துணியை கொண்டு மாநகராட்சி பணியாளர்கள் மூடினர்.

Next Story