பழனி அருகே பட்டப்பகலில் விவசாயி வெட்டிக்கொலை


பழனி அருகே பட்டப்பகலில் விவசாயி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 25 March 2019 4:30 AM IST (Updated: 25 March 2019 2:31 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே பட்டப்பகலில் விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்டார்.

பழனி,

பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி 9-வது வார்டு வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமன் என்ற ராமசாமி (வயது 50). விவசாயி. இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். ராமனின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து ராமன் ஆண்டிப்பட்டி அருகே மேற்கு சின்னமாப்பட்டியில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை 9 மணி அளவில் ராமன் தனது மொபட்டில் பாப்பம்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். பாப்பம்பட்டி-குதிரையாறு அணை சாலையில் உள்ள வாரச்சந்தை பகுதியில் வந்தபோது, திடீரென மொபட்டை ஒருவர் வழிமறித்தார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில், அந்த நபர் தான் வைத்திருந்த அரிவாளால் ராமனை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ராமன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

காலை நேரம் என்பதால் மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த பகுதியில் கொலையை கண்டவர்கள் சிதறி ஓடினர். இதுகுறித்து பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சையதுபாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதைத்தொடர்ந்து ராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கொலை குறித்து விசாரித்தனர். அதில் பாப்பம்பட்டி வடக்குத்தெருவை சேர்ந்த தொழிலாளியான தண்டபாணி (55), ராமனை கொலை செய்ததும், அவர் பாப்பம்பட்டி விலக்கு பகுதியில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் தண்டபாணியை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவரை பழனி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story