திருவெண்ணெய்நல்லூர் அருகே, லாரி மீது வேன் மோதல் -டிரைவர் பலி


திருவெண்ணெய்நல்லூர் அருகே, லாரி மீது வேன் மோதல் -டிரைவர் பலி
x
தினத்தந்தி 24 March 2019 11:17 PM GMT (Updated: 24 March 2019 11:17 PM GMT)

திருவெண்ணெய்நல்லூர் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.

அரசூர், 

திருச்சி எடமலைப்பட்டி புதூர் அன்பிலார் நகரை சேர்ந்தவர் செல்வம் மகன் ராஜேஷ் (வயது 33). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கூரியர் நிறுவனத்தில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ராஜேஷ் கூரியர் நிறுவனத்துக்கான பார்சல்களை வேனில் ஏற்றிக் கொண்டு திருச்சியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். அந்த வேன் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அடுத்த இருவேல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னாள் சென்ற லாரியை ராஜேஷ் முந்தி செல்ல முயன்றார். அந்த சமயத்தில் வேன் எதிர்பாரதவிதமாக லாரி மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் வேனின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது. வேன் டிரைவர் ராஜேஷ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்துபற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தியதோடு, விபத்தில் பலியான ராஜேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story