ஒகேனக்கல் நீரேற்று நிலையத்திற்கு வந்த சிறுத்தை குட்டி சிக்கியது


ஒகேனக்கல் நீரேற்று நிலையத்திற்கு வந்த சிறுத்தை குட்டி சிக்கியது
x
தினத்தந்தி 28 March 2019 4:15 AM IST (Updated: 28 March 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

ஒகேனக்கல் நீரேற்று நிலையத்திற்கு வந்த சிறுத்தை குட்டி கூண்டில் சிக்கியது.

பென்னாகரம், 

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் சிறுத்தை, மான், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி மான், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகிறது. கடந்த 24-ந்தேதி இரவு ஒகேனக்கல் நீரேற்று நிலையத்திற்குள் தண்ணீர் தேடி சிறுத்தை குட்டியை அப்பகுதி மக்கள் நாய் குட்டி என நினைத்து விரட்ட முயன்றனர்.

ஆனால் அருகில் சென்று பார்த்த போது அது நாய் குட்டி இல்லை சிறுத்தை குட்டி என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து ஒகேனக்கல் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் சிறுத்தை குட்டி வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் வனச்சரகர்கள் கேசவன், குணசேகரன் மற்றும் வனத்துறையினர் நீரேற்று நிலைய பகுதியில் கூண்டு வைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் தேடி வந்த ஒரு வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை குட்டி வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிக்கியது. வனத்துறையினர் அந்த சிறுத்தை குட்டியை வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த குட்டியை வனப்பகுதியில் விடுவது குறித்து வனத்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒகேனக்கல் நீரேற்று நிலையத்திற்கு வந்த சிறுத்தை குட்டி சிக்கியது அப்பகுதியில் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story