மின்னணு வடிவில் வைரங்களையும் வாங்கலாம்

தங்கத்தை தங்கப் பத்திரங்கள் மூலம் வாங்குவதைப் போல, வைரங்களையும் மின்னணு வடிவில் வாங்கலாம்.
தற்போது வர்த்தக உத்திகள் நாளுக்கு நாள் புதுவிதமாக மாறிக்கொண்டிருக்கின்றன. வைரம் போன்ற விலை மதிப்புள்ள பொருட்களின் கொள்முதலும், விற்பனையும் மின்னணு வடிவத்தில் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்தியப் பொருட்களின் பங்குச் சந்தை நிறுவனம் மூலம் இது சாத்தியமாகிறது. ‘செபி’யின் பதிவு பெற்ற பொருட்கள் பரிமாற்றத்தின் மூலம் வைரங்கள் எதிர்கால ஒப்பந்தங்கள் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
நவீன யுகத்தில் வைரங்கள் மீது முதலீடு செய்பவர்களுக்கு இது சாதகமான அம்சமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதேபோல சில சிக்கல்களும் இதில் உள்ளன.
மற்ற பரிவர்த்தனைகளைப் போல மின்னணு வடிவிலான வைரங்களை விற்கவோ, வாங்கவோ முடியும். மெருகேற்றப்பட்ட வைரங்களின் சில்லறை விலைக்கு மாறாக, சூரத் மொத்த விற்பனை சந்தைக்கு நிகராக விற்கலாம். மின்னணு வடிவத்திலோ அல்லது இயல்பு உருவத்திலோ தேர்வு செய்துகொள்ள முடியும். இதன் ஒப்பந்த அலகுகள் 100 சென்ட். அதாவது ஒரு கேரட்டில் இருந்து தொடங்குகிறது. வடிவம், கேரட், நிறம், தெளிவு, வெட்டு ஆகியவை இதன் ஒரு பகுதியாக இருக்கும்.
வைர ஒப்பந்தங்களில் தனிநபருக்கு வரம்புகள் உள்ளன. ஒரு சிறிய தொகை மூலமாகவோ அல்லது நிரந்தர முதலீட்டுத் திட்டத்தின் மூலமாகவோ 1 கேரட் வைரத்தை தனதாக்கலாம்.
வாங்கப்படும் வைரங்களுக்கு டயமண்ட் கிரேடிங் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் சான்றிதழ் வழங்கப்படுகிறது. டீ பியர்ஸ் குழுமத்தைச் சேர்ந்த இந்த நிறுவனம், விநியோகிக்க வேண்டிய வைரத்தின் மதிப்பை உறுதிப்படுத்துகிறது. பரிமாற்றத்துக்குப் பிறகு வைரத்தை நீங்கள் மீண்டும் விற்பனை செய்துகொள்ள முடியும்.
தங்கச் சந்தையைப் போல் வைரம் ஒரு நிரந்தரமான சந்தை கிடையாது என்பதால் தள்ளுபடிகள் மற்றும் விலை பேரங்களுக்கு வாய்ப்பில்லை. 30 சென்டுகள், 50 சென்ட் மற்றும் 1 கேரட் ஆகிய மூன்று அடிப்படை ஒப்பந்தங்களில் மட்டுமே பரிமாற்றம் செய்யப்படுகிறது. வைர ஒப்பந்தங்களில் இருந்து நீங்கள் வைரக்கற்களைப் பெற்றால், நீங்கள் விரும்பியதைச் செய்ய இன்னொரு நகைக்கடையை அணுக வேண்டும். முதலீடு செய்ய விரும்பினால் விலை உயர்வுக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டும்.
மின்னணு வடிவிலான இந்த தளத்தை கையாளத் தெரிந்தவர்கள் சாதகங்களைப் பெற முடியும். ‘செபி’யில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் என்பது நல்ல அனுகூலம் என்றாலும், பரிமாற்றப் பின்னணியைக் கவனிப்பது அவசியம்.
Related Tags :
Next Story