திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக அரசியல் கட்சிகள் மீது 59 வழக்குகள் கலெக்டர் தகவல்


திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக அரசியல் கட்சிகள் மீது 59 வழக்குகள் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 8 April 2019 4:00 AM IST (Updated: 8 April 2019 12:11 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக அரசியல் கட்சிகள் மீது திருவள்ளூர் மாவட்டத்தில் 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில சிறப்பு செலவின பார்வையாளர் மது மகாஜன், கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் பாலாஜி, திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் டாக்டர் சுரேந்திரகுமார், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 32 லட்சத்து 85 ஆயிரத்து 310 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 3 ஆயிரத்து 603 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 166 மிதமான பதற்றம் ஏற்படும் வாக்குச்சாவடிகள். பதற்றம் ஏற்படக்கூடியவை 9 வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு உள்ளது.

செலவின கண்காணிப்பு குழுக்களில் 90 பறக்கும் கண்காணிப்பு குழுக்களும், 11 ஒளிப்பதிவுகளை பார்க்கும் குழுக்களும், 11 ஒளிப்பதிவு கண்காணிப்பு குழுக்களும், 11 கணக்கீட்டு குழுக்களும், 11 உதவி செலவின பார்வையாளர்கள் என குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படை கண்காணிப்பு குழுக்கள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் ரூ.2 கோடியே 42 லட்சத்து 64 ஆயிரத்து 140 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் மீது இதுவரை மொத்தம் 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் இருந்து தேர்தல் சம்பந்தப்பட்ட 671 புகார்கள் பெறப்பட்டு உள்ளது. அவற்றில் 595 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடத்தப்பட்டு உள்ளது. 166 மிதமான பதற்றம் ஏற்படும் வாக்குச்சாவடி மையங்கள் கண்டறியப்பட்டு ஒவ்வொரு தொகுதியிலும், போலீசாரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் 1,496 போலீசாரும், 1,451 காவலர் அல்லாதவர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

கூட்டத்தில் காவல்துறை பார்வையாளர் உதயபாஸ்கர் பில்லா, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, செலவின பார்வையாளர்கள் டாக்டர் பிரவீன் குமார், முகேஷ் கட்டாரியா, அர்ஜுன் ஜாட் மற்றும் திரளான அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story