வாக்குச்சாவடியில் பணிபுரியும் அலுவலர்கள் குலுக்கல் மூலம் தேர்வு தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது


வாக்குச்சாவடியில் பணிபுரியும் அலுவலர்கள் குலுக்கல் மூலம் தேர்வு தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது
x
தினத்தந்தி 16 April 2019 10:45 PM GMT (Updated: 16 April 2019 9:08 PM GMT)

வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்கள் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கரூர்,

தமிழகத்தில் நாளை(வியாழக்கிழமை) நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. கரூர் மாவட்டத்தில் மொத்தம் 1,031 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும், ஒரு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் 2-ம், 3-ம், 4-ம் நிலை அலுவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

அதன் அடிப்படையில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு அனைத்து மகளிர் வாக்குச்சாவடி மையமும், 4 மாதிரி வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் 4,181 அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர். இதுதவிர கூடுதலாக(ரிசர்வ்) 835 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் என மொத்தம் 5,016 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்களை தேர்ந்தெடுக்கும் பணி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் நேற்று நடைபெற்றது.

தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அன்பழகன், தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் பிரசாந்த்குமார், தேர்தல் செலவின பார்வையாளர் மனோஜ்குமார், அம்பாட்கர்.எ.தாமோதர் ஆகியோர் முன்னிலையில் கணினி மூலம் 3-வது முறையாக குலுக்கல் நடைபெற்றது.

இதுதொடர்பான ஆணைகள்மூடி முத்திரையிட்ட உரையிலிட்டு சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது. நாளை(வியாழக்கிழமை) முத்திரையிடப்பட்ட உரை பிரிக்கப்பட்டு ஆணை வழங்கப்பட உள்ளது. இதன் பிறகே வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் பிற அலுவலர்கள் எந்தெந்த வாக்குச்சாவடியில் பணிபுரிய வேண்டும் என்பது தெரியவரும்.

மேலும், கரூர் மாவட்டத்தில் உள்ள 1,031 வாக்குச்சாவடிகளிலும் கரூர் சட்டமன்ற தொகுதிக்கு 22, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு 22, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு 23, குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு 24 என 91 மண்டல அலுவலர்கள் பணிபுரிய உள்ளார்கள். இவர்களுக்கு உதவியாக 3 உதவியாளர்கள் மற்றும் காவலர்கள் பணிபுரிய உள்ளார்கள்.

மேலும் இவர்களுடன் 91 ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தப்பட்ட வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காவலர்கள் பாதுகாப்புடன் சமந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த வாகனங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்குதான் செல்கிறதா என கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படுகிறது.

மேலும், கரூர் மாவட்டத்திற்குட்பட்ட கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு மொத்தம் 3,439 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 1,552 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 1,775 வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை எந்திரங்களும் தயார் நிலையில் சம்பந்தப்பட்ட தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) செல்வசுரபி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சரவணமூர்த்தி(கரூர்), மல்லிகா (கிருஷ்ணராயபுரம்), மீனாட்சி (அரவக்குறிச்சி), தேர்தல் பிரிவு தாசில்தார் சிவக்குமார் உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேற்கண்ட தகவல் கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Next Story