காரைக்குடி அருகே விபத்து, பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 மாணவர்கள் பலி - மேலும் 5 பேர் காயம்


காரைக்குடி அருகே விபத்து, பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 மாணவர்கள் பலி - மேலும் 5 பேர் காயம்
x
தினத்தந்தி 17 April 2019 11:15 PM GMT (Updated: 17 April 2019 8:24 PM GMT)

காரைக்குடி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். அவருடைய மகன் அனுஷ்குமார் (வயது 15). இவர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார். இவருடைய நண்பர்கள் மூர்த்தி மகன் சரவணன் (20), தர்மன் மகன் அரவிந்தன்(20). இவர்கள் 2 பேரும் பாலிடெக்னிக் மாணவர்கள்.

அனுஷ்குமார், சரவணன், அரவிந்தன் ஆகியோர் உள்பட சில மாணவர்கள் தேவகோட்டையில் நடந்த தங்களின் நண்பர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு ஒரு காரில் சென்றனர்.

காரை டிரைவர் கோபி ஓட்டிச் சென்றார். விழா முடிந்ததும், அதே காரில் காரைக்குடி-திருச்சி பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தனர். காரைக்குடி அருகே உள்ள வ.சூரக்குடி சாலையில் வந்த போது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சிறிது தூரம் சென்றதும், ரோட்டின் அருகில் உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே மாணவர்கள் அனுஷ்குமார், சரவணன் ஆகியோர் பலியானார்கள். பலத்த காயமடைந்த அரவிந்தன் சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் இந்த விபத்தில் கார் டிரைவர் கோபி (20) மற்றும் 4 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே ஒரு மாணவர் மட்டும் காயமின்றி தப்பினார்.

இதுகுறித்து குன்றக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story