உசிலம்பட்டி அருகே பயங்கரம்: 90 வயதை கடந்த 2 மூதாட்டிகளை அடித்துக் கொன்ற பேரன், மது குடித்ததை கண்டித்ததால் வெறிச்செயல்


உசிலம்பட்டி அருகே பயங்கரம்: 90 வயதை கடந்த 2 மூதாட்டிகளை அடித்துக் கொன்ற பேரன், மது குடித்ததை கண்டித்ததால் வெறிச்செயல்
x
தினத்தந்தி 24 April 2019 11:15 PM GMT (Updated: 24 April 2019 8:50 PM GMT)

உசிலம்பட்டியில் 90 வயதை கடந்த 2 மூதாட்டிகளை அடித்துக்கொன்று வெறிச்செயலில் ஈடுபட்ட பேரனை போலீசார் கைது செய்தனர்.

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேனி சாலை பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 40), கட்டிட தொழிலாளி. இவருடைய பாட்டிகள் வீரம்மாள் (97), பரிபூரணம் (95). இவர்கள் முருகானந்தம் வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். முருகானந்தத்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவரை பாட்டிகள் 2 பேரும் மது குடிப்பதை தவிர்க்குமாறு கண்டித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் மது குடித்து விட்டு முருகானந்தம் வீட்டிற்கு வந்துள்ளார். இதனை பார்த்த வீரம்மாளும், பரிபூரணமும் அவரை மீண்டும் கண்டித்துள்ளனர். அதன்பின்னர் அவர் வேலை தொடர்பாக மோட்டார் சைக்கிளில் பக்கத்து ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

இதில் காயமடைந்த அவர், தனது பாட்டிகள் திட்டியதால் தான் அபசகுனமாக விபத்து நடந்துவிட்டது என்று எண்ணி, மீண்டும் டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்துள்ளார்.

அதன் பின்னர் மதுபோதையில் வீட்டிற்கு வந்த முருகானந்தம், 2 பாட்டிகளிடமும் தகராறு செய்தார். அப்போது நீங்கள் 2 பேரும் திட்டியதால் தான் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து காயமடைந்துவிட்டேன் எனக்கூறி வீரம்மாளையும், பரிபூரணத்தையும் அடித்து உதைத்துள்ளார். இதில் காயமடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார்கள்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா நேரடியாக விசாரணை நடத்தினார். முன்னதாக போலீசார், மூதாட்டிகள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து முருகானந்தத்தை கைது செய்தனர்.

குடிபோதையில் 90 வயதை கடந்த 2 பாட்டிகளை பேரன் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story