தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் ஜி.கே.வாசன் பேட்டி


தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 27 April 2019 4:15 AM IST (Updated: 26 April 2019 9:08 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

நாகர்கோவில்,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேற்று நாகர்கோவில் வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 40 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்து கேட்கிறீர்கள். இந்தியா மிகப்பெரிய ஜனநாயகம். ஜனநாயகத்தில் வாக்களிப்பது ஒவ்வொருவருடைய உரிமை. அந்த உரிமையை முறையாக கொடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்துக்கும், அந்த கோட்பாடுகளுக்கு உட்பட்ட அதிகாரிகளுக்கும் உண்டு. அதனை முறைப்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. அதைச் செய்ய தவறியிருக்குமானால் அது ஏற்புடையது அல்ல. இதுபோன்ற நிலை வரும் நாட்களில் எந்த தேர்தலிலும் ஏற்படக்கூடாது.

இதற்கு அரசியல் காரணங்களை சொல்லக்கூடாது. வாக்காளர்கள் பெயர் இல்லாமல் போனது வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சிகள் இது தான் காரணம் என்று சொன்னால் தோல்விக்கு காரணம் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தமா? சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி பொறுப்பேற்று விசாரணை நடத்த வேண்டும்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை என்றால் அதற்கு அடித்தளமே எதிர்க்கட்சி தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனுடைய வழக்கின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத ஒரு சூழல் தொடர்ந்து ஏற்பட்டது. நடைபெறுகின்ற ஆட்சியாளர்கள் வருகிற ஜூன், ஜூலை மாதத்தில் நடத்தக்கூடிய உத்தரவாதத்தை தந்துள்ளார்கள்.

நாடாளுமன்றம், சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு தான் அவருடன் கூட்டணி குறித்து கருத்து சொல்ல முடியும். தற்போதைய எங்களது கூட்டணி உறுதியான கூட்டணி, வெல்லக்கூடிய கூட்டணி. பஞ்சாயத்து (உள்ளாட்சி) தேர்தலிலும் வெல்லக்கூடிய கூட்டணியாக இது இருக்கும். தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில் எங்களுக்கு ஆட்டோ சின்னம் கிடைத்தது. அது எங்களது வெற்றியை உறுதி செய்துள்ளது.

அகில இந்திய அளவில் மூன்று கட்ட தேர்தல் நடந்துள்ளது. இன்னும் நான்கு கட்ட தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது. மத்தியில் ஆளுகின்ற பா.ஜனதாவும், அதன் கூட்டணி கட்சிகளும் அதிக அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களை வெல்லக்கூடிய நிலையே ஏற்பட்டுள்ளது என்பது எனது கருத்து. குறிப்பாக வட இந்தியாவில் பா.ஜனதா வளர்ச்சி, காங்கிரஸ் கட்சி சரிவு என்பது வெளிப்படையாக தெரிகிறது. பா.ஜனதா தேர்தல் அறிக்கையை அகில இந்திய அளவில் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அதை செயல்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை, சாத்தியம் என்று கருதவில்லை.

பாலியல் பிரச்சினைகளை அரசியலை தாண்டி பார்க்க வேண்டும். இந்தியா முழுவதும் பாலியல் தொந்தரவுகள் எங்கெங்கு நடைபெறுகிறதோ அங்கெல்லாம் மிகக்கடுமையான நடவடிக்கைகள் தேவை. குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை கொடுக்க வேண்டும். கன்னியாகுமரி தொகுதியின் வெற்றி வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டுள்ளார். எங்கள் கூட்டணி மக்களின் நம்பிக்கையை பெற்ற கூட்டணியாக இருக்கிறது. எங்கள் கூட்டணிக்கு எதிரான கருத்து கணிப்பு என்பது கருத்து திணிப்பு. மக்கள் கணிப்பு தான் இறுதி கணிப்பு. அதைத்தான் நாங்கள் நம்புகிறோம்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

பேட்டியின் போது மாநில செயலாளர்கள் சார்லஸ், ராஜமகாலிங்கம், மாவட்ட தலைவர் டி.ஆர்.செல்வம் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Next Story