சாலையில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்து - ஒர்க்ஷாப் உரிமையாளர் சாவு

கடையம் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் ஒர்க்ஷாப் உரிமையாளர் பரிதாபமாக இறந்து போனார்.
கடையம்,
கடையம் அருகே உள்ள அருணாசலம்பட்டி பங்களா தோட்டத்தை சேர்ந்தவர் அரசு மகன் துரைவிவேக் (வயது 25). ஒர்க்ஷாப் உரிமையாளர். இவர் அடையக்கருங்குளத்தில் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.
அவர் கீழஆம்பூர் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆழ்வார்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அவருக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. இதனால் அவரை மீட்டு அவரது பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் நேற்று காலையில் அவர் வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆழ்வார்குறிச்சி போலீசார் வீட்டுக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், அவர் சாலையில் விழுந்ததில் உள்காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்றும், உரிய சிகிச்சை எடுக்காத நிலையில் அவர் இறந்திருக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story