பள்ளிகொண்டா அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை உடலை வாங்க மறுத்து போலீசாரிடம் வாக்குவாதம்

பள்ளிகொண்டா அருகே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் கணவர் தரப்பினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அணைக்கட்டு,
பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி கழனிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத்குமார். இவருடைய மகன் சஞ்சய் (வயது 28). இவர் சென்னை ஆவடியில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். சம்பத்குமாரின் உறவினர் ராஜேந்திரன். திருவாரூரில் வசித்து வருகிறார். இரு குடும்பத்தினரும் பேசி கொள்வதில்லை.
ராஜேந்திரன் மகள் பவிதாவை (23), சஞ்சய் கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். பவிதா பெற்றோரின் எதிர்ப்பை மீறி சஞ்சய்யை திருமணம் செய்து கொண்டார். இதனால் பவிதாவை அவரது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. பவிதா, சஞ்சய் இருவரும் கழனிப்பாக்கத்தில் வசித்து வந்தனர். சஞ்சய் விடுமுறையின் போது சென்னையில் இருந்து கழனிப்பாக்கம் வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
கணவன்- மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், சஞ்சய் வரதட்சணை கேட்டும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி ஏற்பட்ட தகராறில் பவிதா கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பவிதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பவிதாவின் தந்தை ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராஜேந்திரன் பள்ளிகொண்டா போலீஸ் நிலையம் சென்று, தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சஞ்சய்யை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பவிதாவின் உடலை ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர். ஆனால் அவர் வாங்க மறுத்து முறைப்படி தனது மகளின் கணவன் குடும்பத்தினர் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார். அப்போது ராஜேந்திரன் தரப்பினர் மற்றும் போலீசாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, சஞ்சய் உறவினர்கள் சஞ்சய்யை போலீசார் விசாரணை மேற்கொள்கின்றனர். எவ்வாறு உடலை நாங்கள் வாங்க முடியும் என்று கூறி போலீசாரிடம் அவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் பவிதாவின் உடலை கணவர் சஞ்சய் மற்றும் அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
வேலூர் உதவி கலெக்டர் விசாரணைக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வோம் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story