மம்தா பானர்ஜியை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியினர் வாயை கட்டி போராட்டம்


மம்தா பானர்ஜியை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியினர் வாயை கட்டி போராட்டம்
x
தினத்தந்தி 16 May 2019 9:45 PM GMT (Updated: 16 May 2019 7:57 PM GMT)

கொல்கத்தா முதல் மந்திரி மம்தா பானர்ஜியை கண்டித்து புதுவையில் பாரதீய ஜனதா கட்சியினர் வாயை கருப்பு துணியால் கட்டி போராட்டம் நடத்தினார்கள்.

புதுச்சேரி, 

மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா நடத்திய பேரணிக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கோஷமிட்டதால் வன்முறை வெடித்தது. அப்போது தத்துவமேதை வித்யாசாகர் சிலையும் உடைக்கப்பட்டது.

இந்த செயல்களால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டது. வன்முறை காரணமாக ஒருவர் மீது மற்றொருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஒருநாள் முன்னதாகவே பிரசாரத்தை முடிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை கண்டித்து நாடு முழுவதும் பாரதீய ஜனதா கட்சியினர் நேற்று போராட்டங்களை நடத்தினார்கள். புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் கருப்பு துணியால் தங்கள் வாயை கட்டியிருந்தனர். இந்த போராட்டத்தில் மாநில பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், துணைத்தலைவர்கள் செல்வம், சோமசுந்தரம், ஏம்பலம் செல்வம், துரை.கணேசன், செயலாளர்கள் அருள்முருகன், லட்சுமி, பிற்படுத்தப்பட்டோர் அணி அகிலன், தாழ்த்தப்பட்டோர் அணி ஆறுமுகம், மாவட்ட தலைவர் மோகன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story