செம்பூர், பவாயில் கட்டப்பட்டு உள்ள 217 மலிவு விலை வீடுகளுக்கு 66 ஆயிரம் பேர் விண்ணப்பம்


செம்பூர், பவாயில் கட்டப்பட்டு உள்ள 217 மலிவு விலை வீடுகளுக்கு 66 ஆயிரம் பேர் விண்ணப்பம்
x
தினத்தந்தி 28 May 2019 4:30 AM IST (Updated: 28 May 2019 3:04 AM IST)
t-max-icont-min-icon

செம்பூர், பவாயில் கட்டப்பட்டு உள்ள 217 மலிவு விலை வீடுகளுக்கு 66 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த வீடுகளுக்கான குலுக்கல் வருகிற 2-ந்தேதி நடக்கிறது.

மும்பை, 

மராட்டிய வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியமான மகாடா பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் முதல் உயர் வருமானம் கொண்டவர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் அடுக்குமாடி கட்டிடங்களில் வீடுகளை கட்டி குலுக்கல் முறையில் பயனாளிகளை தேர்ந்தெடுத்து விற்பனை செய்து வருகிறது.

தற்போது செம்பூர் மற்றும் பவாயில் கட்டப்பட்டுள்ள 217 வீடுகளை மகாடா விற்பனை செய்ய உள்ளது. இவற்றில் 46 வீடுகள் பவாயிலும், மற்றவை செம்பூர் சங்கர் நகரிலும் உள்ளன. 47 வீடுகள் நடுத்தர வருமானம் கொண்டவர்களுக்கும், மற்றவை குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்த வீடுகளின் விலை ரூ.31 லட்சத்து 54 ஆயிரம், ரூ.39 லட்சத்து 46 ஆயிரம், மற்றும் ரூ.56 லட்சத்து 73 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.

இந்த வீடுகளுக்கான குலுக்கல் ஏப்ரல் 21-ந்தேதி நடைபெறும் என மகாடா அறிவித்து இருந்தது. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து, 217 வீடுகளுக்கான குலுக்கலை அடுத்த மாதம்(ஜூன்) 2-ந்தேதிக்கு மகாடா ஒத்தி வைத்தது.

மலிவு விலை வீடுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியும் இந்த மாதம் 24-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மலிவு விலை வீடுகளை வாங்குவதற்காக மும்பைவாசிகள் ஆன்-லைனில் விண்ணப்பித்தனர். 217 வீடுகளை வாங்குவதற்கு மொத்தம் 66 ஆயிரத்து 78 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

வருகிற 2-ந்தேதி குலுக்கல் நடக்கிறது. அப்போது பயனாளிகளின் பெயர்கள் மகாடாவின் mhada.gov.in என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்படும் என மகாடா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story