கோவில்பட்டி அருகே 200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு


கோவில்பட்டி அருகே 200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 11 Jun 2019 9:30 PM GMT (Updated: 11 Jun 2019 12:20 PM GMT)

கோவில்பட்டி அருகே 200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி, 

கோவில்பட்டி அருகே 200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஆய்வு 

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தின் நிறுவனர் மணிகண்டன், தலைவர் ராஜேந்திரன், கொல்லங்குடி காளிராஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் களஆய்வு மேற்கொண்டனர். கோவில்பட்டி அருகே உள்ள முடுக்குமீண்டான்பட்டி குளத்தின் மடையில் ஒரு கல்வெட்டு இருந்ததைக் ஆய்வு குழுவினர் கண்டுபிடித்தனர். இந்த கல்வெட்டு சுமார் 200 ஆண்டுகள் பழமையானது என்பது தெரியவந்து உள்ளது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் ராஜகுரு, மணிகண்டன் ஆகியோர் கூறியதாவது:–

கல்வெட்டு 

குளம், கண்மாய்களில் உள்ள நீரை நிலங்களுக்கு திறந்து விடுவதற்காக அமைக்கப்படும் அமைப்பு மடை ஆகும். இது உறுதியான கருங்கல்லினால் அமைக்கப்படும் போது நீண்ட நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும். மழைக்காலங்களில் நீர்நிலைகளில் உள்ள நீரை தேவையின்றி வெளியேறாத வகையில் மூடுவதற்கும் இந்த மடைகள் உதவுகின்றன. முழுவதும் கல்லினால் அமைக்கப்படும் மடைகளை கல்மடை என்று அழைக்கப்படுகிறது. அதன்படி முடுக்குமீண்டான்பட்டி கிராமத்தில் உள்ள குளத்தின் கரைக்கு அருகில் உள்ள ஒரு மடையில் 10 அடி உயரம் உள்ள 2 தூண்கள் உள்ளன. இதில் கிழக்கு பகுதியில் உள்ள தூணின் ஒரு பக்கத்தில் 4½ அடி உயரத்துக்கு மொத்தம் 25 வரிகளில் கல்வெட்டு உள்ளது.

கல்வெட்டு விவரம் 

இந்த கல்வெட்டு, எட்டயபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த மன்னர் ராஜ ராஜ ராஜ மானியர் ஜெகவீர ராம எட்டப்பராசர், முடுக்குமீண்டான்பட்டியில் உள்ள தன் மாப்பிள்ளை சொக்கையாவுக்கு இந்த ஊரை தானமாகக் கொடுத்து இந்த ஊர் குளத்தில் ஒரு கல் மடையையும் செய்து வைத்த செய்தியை கல்வெட்டு தெரிவிக்கிறது. கல்வெட்டு முழுவதும் தமிழில் இருந்தாலும் சோமவாரமு, உத்திர நட்சேத்திரமு ஆகிய தெலுங்குச் சொற்களும் உள்ளன.

மேலும் மன்னரை அய்யர் எனக் குறிப்பிட்டு உள்ளனர். எட்டயபுரம் மன்னர்களை அவர்களது பெயருடன் அய்யன் என சேர்த்து அழைக்கும் வழக்கம் இருந்து உள்ளது. ஆனால் இந்த கல்வெட்டில் அய்யர் என பன்மை விகுதியில் மன்னர் குறிப்பிடப்பட்டு உள்ளார். இதில் மன்னரின் பொதுவான பெயரை மட்டுமே குறிப்பிட்டு உள்ளனர். இதனால் மன்னர் பற்றிய தகவல்களை அறிய முடியவில்லை. மன்னரின் மாப்பிள்ளை இந்த ஊரைச் சேர்ந்தவராக இருக்கலாம். இந்த கல் மடை உத்திர நட்சத்திரத்தில் சுபதினத்தில் நடப்பட்டு உள்ளது.

ஆண்டு 

இந்த கல்வெட்டு 5021 என ஆண்டில் தொடங்கும் பெருமாள் துணை என்று முடிகிறது. இதில் 5021 விய ஆண்டு ஆனி மாதம் 28–ம் நாள் திங்கட்கிழமை என வரும் ஆண்டு, கலியுகம், சக ஆண்டு எதிலும் பொருந்தவில்லை. எனவே இதில் உள்ள விய எனும் தமிழ் ஆண்டு, மாதம், கிழமை மற்றும் எழுத்தமைப்பு கொண்டு, இந்த கல்வெட்டின் காலம் கி.பி.1826 எனக் கணிக்க முடிகிறது.

இந்த கல்வெட்டு உருவான காலத்தில் தமிழ்நாட்டில் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி நடந்து வந்தது. ஆனால் ஆங்கிலேயரின் ஆண்டு உள்ளிட்ட வழக்கத்தை இந்த கல்வெட்டில் காண முடியவில்லை. இதில் தமிழ் எண்களையும், தமிழ் ஆண்டையும் பயன்படுத்தி உள்ளனர். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் அமைத்த கல்மடை மூலம் எட்டயபுரம் சமஸ்தானத்தின் எல்லை முடுக்குமீண்டான்பட்டி வரை பரவி இருந்ததை அறிய முடிகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story