உளுந்தூர்பேட்டை அருகே, தீக்குளித்து பெண் தற்கொலை


உளுந்தூர்பேட்டை அருகே, தீக்குளித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 12 Jun 2019 10:00 PM GMT (Updated: 12 Jun 2019 6:47 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

உளுந்தூர்பேட்டை,

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன். இவரது மகள் சங்கீதா (வயது 29). இவருக்கும் விக்கிரவாண்டி அருகே உள்ள எசாலம் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சிவசங்கர்(4) என்ற மகன் உள்ளான். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா கடந்த 3 ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து குறிஞ்சிப்பாடியில் உள்ள பெற்றோர் வீட்டில் மகனுடன் வசித்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சண்முகசுந்தரம் குறிஞ்சிப்பாடிக்கு சென்று, தனது மகன் சிவசங்கரை தன்னுடன் அனுப்புமாறு சங்கீதாவிடம் கேட்டுள்ளார். அதற்கு சங்கீதா மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சங்கீதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் உறவினர்கள் அவரை காப்பாற்றி விட்டனர்.

இதையடுத்து உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூரில் உள்ள தனது பாட்டி வீட்டில் சங்கீதா வசித்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது, சங்கீதா மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவி எரிந்ததில் வலியால் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சங்கீதா இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சங்கீதாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் அவரது தற்கொலை குறித்து சப்-கலெக்டர் சாருஸ்ரீயும் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story