மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது: 2 வாலிபர்கள் பரிதாப சாவு


மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது: 2 வாலிபர்கள் பரிதாப சாவு
x
தினத்தந்தி 14 Jun 2019 10:30 PM GMT (Updated: 14 Jun 2019 7:38 PM GMT)

மரக்காணம் அருகே புதுச்சேரிக்கு வந்து விட்டு சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி 2 வாலிபர்கள் பலியானார்கள்.

மரக்காணம்,

காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூர் அருகே உள்ள சூனாம்பேடு காலனி பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா என்ற கோகுலதேவன் (வயது 23), தொழிலாளி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜவர்மன் (20) என்பவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் புதுச்சேரிக்கு சென்றனர். அங்கு வேலையை முடித்துக்கொண்டு மீண்டும் காஞ்சீபுரத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை ராஜவர்மன் ஓட்டினார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கீழ்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வந்த ஒரு அரசு அவர்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ராஜவர்மன், சூர்யா ஆகிய 2 பேரும் தூக்கிவீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதைப்பார்த்ததும் அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டனர். சிகிச்சைக்காக அவர்களை புதுச்சேரி கனகசெட்டிகுளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், வழியிலேயே 2 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story