வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் பலி
x
தினத்தந்தி 16 Jun 2019 10:00 PM GMT (Updated: 16 Jun 2019 7:44 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் பலியானார்கள்.

நாங்குநேரி, 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தளபதிசமுத்திரம் கீழூரை சேர்ந்தவர் மந்திரம் (வயது 55). விவசாயி. இவர் நேற்று காலை தளபதிசமுத்திரம் கீழூரில் இருந்து நாங்குநேரிக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். வாகைகுளம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த காரும், அவரது மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த மந்திரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மந்திரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மந்திரத்துக்கு இசக்கியம்மாள் என்ற மனைவியும், 6 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர்.

நெல்லையை அடுத்த பேட்டை நேருஜிநகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (65). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று காலை பால் வாங்கி கொண்டு, பேட்டை சாஸ்திரிநகர் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் வந்த லோடு ஆட்டோ எதிர்பாராதவிதமாக ஆறுமுகம் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, லோடு ஆட்டோ டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். ஆறுமுகத்திற்கு மனைவி, 2 மகன் கள், ஒரு மகள் உள்ளனர்.

சேர்ந்தமரம் அருகே உள்ள வீரசிகாமணி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் செய்யது அப்துல்காதர் (80). இவர் சம்பவத்தன்று அங்குள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக் காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செய்யது அப்துல்காதர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேர்ந்தமரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உத்திரகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஊத்துமலை அருகே உள்ள கீழக்கலங்கல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகையா (62). இவர் சம்பவத்தன்று தனது மொபட்டில் அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் வந்த மோட்டார் சைக்கிள், சண்முகையா மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story