திருவாடானை பகுதியில் மோட்டார் சைக்கிளை திருடி பாகங்களை பிரித்து விற்கும் மர்ம கும்பல்; பொதுமக்கள் அச்சம்


திருவாடானை பகுதியில் மோட்டார் சைக்கிளை திருடி பாகங்களை பிரித்து விற்கும் மர்ம கும்பல்; பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 19 Jun 2019 10:30 PM GMT (Updated: 19 Jun 2019 9:32 PM GMT)

திருவாடானை பகுதியில் மோட்டார் சைக்கிளை திருடி பாகங்களை பிரித்து விற்கும் மர்ம கும்பலால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தொண்டி,

திருவாடானை தாலுகா ஆதியூர் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 55), மரம் வெட்டும் கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆதியூர் கிராமத்தின் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது அந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர் பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் திருவாடானை கோர்ட்டு பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து அங்கு சென்று பார்த்த போது இவரது மோட்டார் சைக்கிள் பாகங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு பனை ஓலையால் மூடி வைக்கப்பட்டிருந்தது.

மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி இதுபோன்று உதிரி பாகங்களை பிரித்து விற்றால் கண்டு பிடிக்க முடியாது என கருதி இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் திருவாடானை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story