பண்ருட்டி அருகே, இளம்பெண் தீயில் கருகி பலி - கூரை வீட்டில் எரிந்த தீயை அணைத்தபோது பரிதாபம்

பண்ருட்டி அருகே இளம்பெண் தீயில் கருகி பலியானார். கூரை வீட்டில் எரிந்த தீயை அணைத்தபோது நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
பண்ருட்டி,
விழுப்புரம் பெரியகாலனியை சேர்ந்தவர் சிலம்பரசன்(வயது 27). இவருக்கும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கோழிப்பாக்கம் பாபுகுளத்தை சேர்ந்த மணவாளன் மகள் பத்மபிரியாவிற்கும்(22) கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. பத்மபிரியாவின் அண்ணன் அருள்செல்வனுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதற்காக சிலம்பரசன் குடும்பத்துடன் பாபுகுளத்திற்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் மணவாளனின் தம்பி தணிகாசலத்தின் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதனால் திடுக்கிட்டு எழுந்த பத்மபிரியா மற்றும் அவரது உறவினர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக பத்மபிரியாவின் உடலில் தீப்பற்றி எரிந்தது. வலியால் அவர் அலறி துடித்தார். உடனே உறவினர்கள், தீயை அணைத்து, அவரை மீட்டனர். இருப்பினும் உடல் கருகி பத்மபிரியா சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனிடையே தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜ், இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பத்மபிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மணவாளன் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story