ரூ.1,640 கோடி மோசடி வழக்கு: நகைக்கடை அதிபர் மன்சூர்கான் டெல்லியில் கைது அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை


ரூ.1,640 கோடி மோசடி வழக்கு: நகைக்கடை அதிபர் மன்சூர்கான் டெல்லியில் கைது அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 20 July 2019 4:00 AM IST (Updated: 20 July 2019 2:28 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் ரூ.1,640 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த நகைக்கடை அதிபர் மன்சூர்கானை டெல்லியில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

பெங்களூரு,

பெங்களூரு சிவாஜிநகரில் நகைக்கடை நடத்தி வந்தவர் மன்சூர்கான். இவர் பெங்களூருவின் பிற பகுதிகளிலும் நகைக்கடைகள், மருந்து கடைகள் நடத்தி வந்தார். இதுதவிர பல்வேறு தொழில்களில் அவர் ஈடுபட்டு வந்தார். இவருடைய நிறுவனத்தில் ஏராளமானவர்கள் பணம் முதலீடு செய்தனர். இந்த நிலையில் தன்னிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க் ரூ.400 கோடி வாங்கி கொண்டு தரமறுப்பதால் தற்கொலை செய்து கொள்ள இருப்பதாக ஆடியோ ஒன்றை வெளியிட்ட மன்சூர்கான், துபாயில் தலைமறைவாக இருந்து வந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கமர்சியல் தெரு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். மேலும் அவரை கைது செய்ய சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் தனது நிறுவனத்தில் முதலீடு செய்த 40 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களிடம் இருந்து ரூ.1,640 கோடி மோசடி செய்துவிட்டு மன்சூர்கான் துபாயில் பதுங்கியது தெரியவந்தது. மேலும் மன்சூர்கான் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணையை தொடங்கியது. அத்துடன், சிறப்பு விசாரணை குழுவும், அமலாக்கத்துறையும் தேடப்படும் குற்றவாளியாக மன்சூர்கானை அறிவித்தது. உளவுத்துறை சார்பில் ‘ப்ளு கார்னர்‘ நோட்டீசு வழங்கப்பட்டது.

இந்த மோசடி வழக்கு தொடர்பாக நகைக்கடைகளின் இயக்குனர்கள் 12 பேர் உள்பட மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர் விஜய்சங்கர், பெங்களூரு வளர்ச்சி குழும உதவி கமிஷனர் நாகராஜ் உள்ளிட்டவர்களும் அடங்குவர். இருப்பினும் மன்சூர்கானை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

மன்சூர்கானின் வீடு, நகைக்கடைகள் உள்பட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்திய சிறப்பு விசாரணை குழுவினர் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள், வெள்ளிப்பொருட்களையும், முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் மன்சூர்கானின் 100-க்கும் அதிகமான வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன.

இத்தகைய சூழ்நிலையில் துபாயில் இருந்தபடியே வீடியோ ஒன்றை வெளியிட்ட மன்சூர்கான், தொழில்அதிபர்கள், அரசியல்வாதிகளின் பெயர்களை கூறி அவர்கள் தன்னிடம் ஏராளமான பணம் வாங்கி திரும்ப தரவில்லை என்று குற்றம்சாட்டினார். போலீசார் உரிய பாதுகாப்பு அளித்தால் இந்தியா திரும்புவதாகவும் அவர் வீடியோவில் கூறினார். இதன் தொடர்ச்சியாக உரிய பாதுகாப்பு அளிப்பதாகவும், போலீசாரிடம் சரண் அடையும்படி சிறப்பு விசாரணை குழுவினர் மன்சூர்கானுக்கு அறிவுறுத்தினர்.

இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு மன்சூர்கான் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் பேசிய அவர், ‘எனக்கு இந்திய நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. என்னை நம்பிய மக்களுக்கு துரோகம் செய்யமாட்டேன். 24 மணிநேரத்தில் இந்தியா வந்து அனைத்து முதலீட்டாளர்களுக்கும் பணத்தை திரும்ப வழங்குகிறேன்‘ என்று கூறினார். மேலும் தன்னிடம் மோசடி செய்த நபர்களின் பட்டியலையும் போலீசாரிடம் வழங்குவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை 1.55 மணிக்கு துபாயில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்து இறங்கிய மன்சூர்கானை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அதிகாரிகள் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மன்சூர்கான் கைது செய்யப்பட்டு இருப்பது குறித்து சிறப்பு விசாரணை குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சிறப்பு விசாரணை குழுவினரும் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர். அமலாக்கத்துறையினர் மன்சூர்கானிடம் விசாரணையை முடித்த பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்த உள்ளனர். இதையடுத்து முழுமையான விசாரணைக்காக அவரை சிறப்பு விசாரணை குழு காவலில் எடுக்க உள்ளது.

Next Story