குற்றாலத்தில் படகு சவாரி கலெக்டர் இன்று தொடங்கி வைக்கிறார்


குற்றாலத்தில் படகு சவாரி கலெக்டர் இன்று தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 27 July 2019 4:30 AM IST (Updated: 27 July 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் படகு குழாமில் தண்ணீர் தேங்கியதை தொடர்ந்து, இன்று(சனிக்கிழமை) படகு சவாரியை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைக்கிறார்.

தென்காசி,

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி உள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து குதூகல குளியல் போட்டு வருகின்றனர்.

நேற்று சாரல் மழை பெய்யவில்லை. ஆனால் இதமான குளிர் காற்று வீசியது. மேகமூட்டமாக காணப்பட்டது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தற்போது அருவிகளில் தண்ணீர் கொட்டி வருவதால், ஐந்தருவி செல்லும் சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் அமைக்கப்பட்டுள்ள படகு குழாமில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இங்கு ஆண்டு தோறும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க படகு சவாரியை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் போதிய சாரல் மழை பெய்யாததாலும், படகு குழாமில் தண்ணீர் தேங்காததாலும் படகு சவாரி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

தற்போது அங்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதை தொடர்ந்து படகு குழாயில் படகு சவாரியை தொடங்கி சுற்றுலா வளர்ச்சி கழகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா இன்று(சனிக்கிழமை) காலை 10.45 மணிக்கு படகு சவாரியை படகு குழாமில் தொடங்கி வைக்க உள்ளதாக படகு குழாம் மேலாளர் கருப்பையா தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:- தற்போது படகு குழாமில் 32 படகுகள் உள்ளன. இதில் 2 பேர் செல்லக்கூடிய பெடல் படகுகள் 7-ம், 4 பேர் செல்லக்கூடிய பெடல் படகுகள் 16-ம், 4 பேர் செல்லக்கூடிய துடுப்பு படகுகள் 5-ம், ஒருவர் மட்டும் பயணிக்க கூடிய கயாக் வகை துடுப்பு படகுகள் 4-ம் உள்ளன. கடந்த ஆண்டை போல படகு சவாரிக்கு வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story