மாவட்டத்தில் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகளை கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
விழுப்புரம்,
விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் கஸ்பாகாரணை ஏரியில் ரூ.42 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியையும், ஏரியில் இருந்து விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்காக மதகு வழியாக தண்ணீர் செல்லும் பாதையை தூர்வாருவதையும் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அருகில் உள்ள வாய்க்கால்களை அகலப்படுத்தி, தூர்வாரி இருபுறமும் உள்ள கரையை பலப்படுத்த வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
அதனை தொடர்ந்து மயிலம் ஒன்றியம் கொல்லியங்குணம் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரியில் ரூ.22 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளையும், ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் செல்லும் வாய்க் காலை தூர்வாரும் பணியையும் ஆய்வு செய்த கலெக்டர், வாய்க்கால்களின் இருபுறமும் கரையை பலப்படுத்த வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதன் பின்னர் வானூர் ஒன்றியம் கொஞ்சுமங்கலம் ஏரியில் ரூ.25 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளையும், கண்டமங்கலம் ஒன்றியம் பள்ளிநெலியனூர் ஊராட்சி ஏரியில் நடைபெறும் பணிகளையும் கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார். மேலும் பாசனதாரர்கள் அரசு அலுவலர்களுடன் இணைந்து இப்பணிகளில் முழுவதுமாக ஈடுபட்டு, இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது விழுப்புரம் பொதுப்பணித்துறை கீழ்பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஜவகர், உதவி செயற்பொறியாளர் சுமதி, உதவி பொறியாளர்கள் ஞானசேகர், சீனிவாசன், தாசில்தார்கள் பார்த்திபன், தங்கமணி உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story